உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்களும், 16 எம்.எல்.ஏ.க்களும் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது, சிவசேனை இரண்டாக பிரிந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கினர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், கட்சியின் பெயர், சின்னம் அவர்கள் தரப்பினர் பெற்றனர். உத்தவ் தாக்கரேவின் அணி 'உத்தவ் பாளா சாகேப் தாக்கரே' (UBT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில், சிவசேனை உத்தவ் பிரிவில் மொத்தமுள்ள 9 மக்களவை எம்பிக்களில் 7 பேரும், 20 எம்.எல்.ஏ.க்களில் 16 பேரும் ஷிண்டே பிரிவில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
கடந்த ஜூன் 7 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தில்லி சென்றபோது, அவரைச் சந்தித்து உத்தவ பிரிவு எம்பிக்கள் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைக்கு ’ஆபரேஷன் டைகர்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், 7 பேரும் இணைவது கிட்டத்திட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக சிவசேனை மூத்த தலைவரும் எம்.எல்.சி.யுமான குருபால் துமானே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “மருத்துவமனைக்கு ஆபரேஷனுக்காக சென்றால், முதலில் உடலைப் பரிசோதிப்பார்கள், பின்னர்தான் ஆபரேஷனுக்கான தேதியை மருத்துவர் அளிப்பார். தற்போது ஆபரேஷன் உரிய தேதியில் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜூலையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அவர்கள் சிவசேனையில் இணைவார்கள் என குருபால் துமானே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவசேனை உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“அவர்கள் எங்களைப் புலிகள் என்று நினைக்கிறார்கள். ஒரு புலியை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. எங்கள் கட்சி ஒற்றுமையாகவே உள்ளது.
முன்பும் சிவசேனையில் இதுபோன்று நடந்தது. ஆனால் எங்கள் கட்சி இப்போதும் நிலைத்து நிற்கிறது. எங்கள் கட்சிக்கு நீண்ட போராட்ட வரலாறு உண்டு. நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களோ கட்சியில் இருப்பதும், வெளியேறுவதும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. எங்கள் கட்சி என்பது தொண்டர்களால் உருவானது” எனத் தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியும் இணைவதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை கோர முடியாது.
திரிணமூல் காங்கிரஸின் 58 எம்.எல்.ஏ.க்கள் இணைந்து கட்சித் தலைமை நியமித்த பேரவைக் குழுத் தலைவரை மாற்றிய நிலையில், அக்கட்சியின் 20 எம்.பி.க்கள் மாற்றுக் கட்சியில் இணைந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவுள்ளனர்.
இதன்மூலம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேகமாக நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Operation Tiger! 7 MPs and 16 MLAs to switch from the Uddhav faction to the Shinde faction?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு! உத்தவ் சிவசேனை மீண்டும் உடைகிறதா?

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது: சிவசேனை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராக வாக்களிக்கப்படும்! - இபிஎஸ் தரப்பு









