/

அமர்நாத் யாத்திரை வழித்தடங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறப்பு மீட்புக் குழுக்கள்!

அமர்நாத்தில் சிறப்பு மீட்புக் குழுக்களை நியமிக்கப்பட்டது தொடர்பாக...

News image

அமர்நாத் யாத்திரை

Updated On :18 ஜூன் 2026, 6:04 pm IST

அமர்நாத் யாத்திரைக்கான இரு வழித்தடங்களிலும் பணியமர்த்துவதற்காக 45 சிறப்பு மலை மீட்புக் குழுக்களை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர் நலின் பிரபாத் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள புனிதமான அமர்நாத் குகைக் கோயிலுக்கான இரு வழித்தடங்களில் உள்ள 21 இடங்களில் இந்தக் குழுக்கள் பணியமர்த்தப்படும். ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள், மத்திய ரிசர்வ் காவல் படை, சஷாஸ்த்ரா சீமா பல் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தக் குழுக்கள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்தாண்டும் பக்தர்களுக்கு உதவக் குழுக்கள் நிலைநிறுத்தப்படும். அவர்கள் பக்தர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் செய்து தருவார்கள்.

இருவழித்தடங்களில் நிறுத்தப்படும் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவை. இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே முந்தைய ஆண்டுகளிலும் பணியமர்த்தப்பட்டவர்கள் என்று எஸ்டிஆர்எஃப் இயக்குநர் இம்தியாஸ் உசேன் மிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவடைகிறது.

வருடாந்திர யாத்திரையைச் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்குத் தேவையான பாதுகாப்புத் தயார்நிலை, அவசரக்கால மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்து வலுப்படுத்துவதற்காக, பள்ளத்தாக்கு முழுவதும் விரிவான ஒத்திகைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.