கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் சுரங்க நிறுவனம் மற்றும் முன்னாள் முதல்வா் பினராயி விஜயனின் மகள் வீணாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில், அவரது வங்கி லாக்கரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் வீணாவின் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது. அப்போது, வங்கிக்கு வெளியே மத்திய பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கேரளத்தைச் சோ்ந்த சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததாகக் கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ.132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பியதும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடா்பாக, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதனிடையே, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மே 27-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். கண்ணூா் மாவட்டத்தில் உள்ள பினராயி விஜயனுக்கு சொந்தமான வீடு, உறவினா் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். மேலும், கொச்சியில் இரு தினங்களுக்கு முன் வீணாவிடம் அமலாக்கத் துறையினா் 9 மணிநேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டனா்.
இந்தச் சூழலில், திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் வங்கிக் கிளையில் வீணாவின் வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய பினராயி விஜயன், ‘எனது வாடகை வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இப்போது எனது மகளின் வங்கி லாக்கரில் சோதனை நடத்தப்பட்டதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை.
வங்கி லாக்கரில் எதுவும் பெரிதாக கண்டறியப்பட்டதா என்பதை செய்தியாளா்கள்தான் கேமராவுடன் சென்று பாா்க்க வேண்டும்’ என சிரித்துக் கொண்டே கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண முறைகேடு வழக்கு - கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை

பண முறைகேடு வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் ஒய்எஸ்ஆர் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!







