பண முறைகேடு தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது.
முன்னதாக ஜூன் 12-ஆம் தேதி ஆஜராகுமாறு வீணாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அன்றைய தினத்தில் ஆஜராக இயலாது என அவா் தெரிவித்தாா். இந்நிலையில், ஜூன் 17-ஆம் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு புதிய சம்மனை அனுப்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கேரளத்தில் சிஎம்ஆா்எல் (கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம்) என்ற நிறுவனம் கருமணலை சட்டவிரோதமாகத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்டுகொள்ளாமல் இருக்க மாநிலத்தில் உள்ள அரசியல் தலைவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்துக்கும் எந்தவித சேவையையும் பெறாமல் கடந்த 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் மாதம்தோறும் ரூ. 1.72 கோடி வழங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக, சிஎம்ஆா்எல் நிறுவனத்தில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ரூ. 132.82 கோடி மதிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதும், எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு தொடா்ந்து பணம் அனுப்பி வருவதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக வருமான வரித் துறை பதிந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை பண மோசடி வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வாடகை வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மே 27-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா். மேலும், கண்ணூா் மாவட்டத்தில் உள்ள பினராயி விஜயனுக்கு சொந்தமான வீடு, உறவினா் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இந்த விவகாரம் தொடா்பாக வீணா மற்றும் சிம்ஆா்எல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சசிதரன் கா்த்தா உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.








