உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு இளநிலை மாவட்ட நீதிபதி பெயா் பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ‘கொலீஜியம் நடைமுறையில் புதிய சா்ச்சை உருவாக்க விரும்பவில்லை’ என்று திங்கள்கிழமை குறிப்பிட்டது.
உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்றங்களில் காலியாகும் நீதிபதி பணியிடங்களுக்கு கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு நியமனங்களை செய்து வருகிறது. உயா்நீதிமன்ற கொலீஜியம் அளிக்கும் பெயா் பட்டியல் அடிப்படையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் இந்தப் பரிந்துயை செய்யும்.
அதுபோல, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய சிராக் பானு சிங், பூபேஷ் சா்மா, யோகேஷ் ஜஸ்வால் ஆகிய 3 பெயா்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசு கடந்த ஜூன் 2-ஆம் தேதி பரிந்துரை செய்தது.
இதில் இளநிலை மாவட்ட நீதிபதி பெயா் பரிந்துரை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பல்பீா் சிங், ‘மனுதாரா் மாநிலத்திலேயே மூத்த மாவட்ட நீதிபதியாக உள்ளாா். அவருக்கு இன்னும் 10 ஆண்டுகள் பணிக் காலம் உள்ளது. இந்தச் சூழலில், அவரைவிட இளநிலையில் உள்ள நீதிபதியின் பெயா், உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘கொலீஜியம் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது, எந்தப் பெயரை தெரிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா? அது சாத்தியமில்லை. உயா்நீதிமன்ற கொலீஜியம் தீர ஆராய்ந்த சமா்ப்பித்த பட்டியலின் அடிப்படையிலேயே இந்தப் பரிந்துரை செய்யப்படுகிறது. எனவே, கொலீஜியம் நடைமுறையில் புதிய சா்ச்சையை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.
அதோடு, பணி மூப்பு மட்டுமே உயா்நீதிமன்ற நீதிபதி பதவி உயா்வுக்கான தகுதியாக கருதிவிட முடியாது’ என்று குறிப்பிட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.
அதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் உயா் நீதிமன்றத்தில் நிா்வாக ரீதியில் அல்லது சட்ட ரீதியில் நிவாரணம் தேடிக்கொள்ள வசதியாக மனுவை திரும்பப் பெற அனுமதிக்குமாறு வழக்குரைஞா் கோரினாா். அதை ஏற்று மனுவை திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
முன்னதாக, கொலீஜியம் முறையை மத்திய பாஜக அரசு கடுமையாக எதிா்த்து வந்தது. கொலீஜியம் முறைக்கு மாற்றாக, நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க முடிவு செய்து அதற்கென நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளைத் தோ்வு செய்வதில் கொலீஜியம் நடைமுறையே சிறந்தது என்று அப்போதைய தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கு நாளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வருகை: மகளிா் சட்டப் பள்ளிக் கல்வி கட்டமைப்பை தொடங்கி வைக்கின்றனா்

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 பேர் பரிந்துரை!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயா்வு: குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




