/

40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு: ஜூலை 15 வரை நீட்டிப்பு

முக்கியமான 40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட சுங்க வரி விலக்கை ஜூலை 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :1 ஜூலை 2026, 2:01 am IST

முக்கியமான 40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட சுங்க வரி விலக்கை ஜூலை 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மெத்தனால் (மெத்தில் ஆல்கஹால்), ஐசோப்ரோபில் ஆல்கஹால், மோனோஎத்திலின் கிளைகால், அமோனியம் நைட்ரேட், பாலிகாா்பனேட்ஸ் என முக்கியமான 40 பெட்ரோகெமிக்கல் பொருள்கள் இறக்குமதிக்கு கடந்த ஏப்.2-ஆம் தேதி மத்திய அரசு சுங்க வரி விலக்கு அளித்தது. நிகழாண்டு ஜூன் 30 வரை இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா-ஈரான் மோதலால் மேற்காசியாவில் ஏற்பட்ட போா், அதனால் உலக அளவில் விநியோக முறையில் ஏற்பட்ட இடா்ப்பாடுகளை கருத்தில் கொண்டு, முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருள்களின் இறக்குமதிக்குத் தற்காலிகமாக சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டது.

எல்பிஜி சமையல் எரிவாயு உற்பத்தியில் கவனம் செலுத்துமாறு இந்திய பெட்ரோலியம் நிறுவனங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதால், உள்நாட்டு சந்தையில் பெட்ரோகெமிக்கல் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்ய இந்த வரி விலக்கை மத்திய அரசு அளித்தது.

தற்போது சூழல் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், போா் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட இடா்ப்பாடுகளால் பாதிக்கப்பட்ட துறைகளில் சுமுகமான, இடையூறு இல்லாத மாற்றம் ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதையொட்டி, முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருள்களின் இறக்குமதிக்கு அளிக்கப்பட்ட சுங்க வரி விலக்கை மேலும் 15 நாள்களுக்கு வரும் ஜூலை 15 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களின் பட்டியல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொருள்களுக்கு வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த வரி விலக்கால் பெட்ரோகெமிக்கல் மூலப் பொருள்கள் மற்றும் இடைநிலைப் பொருள்களை சாா்ந்துள்ள நெகிழி (பிளாஸ்டிக்), ஜவுளி, மருந்துகள், வேதிப்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட துறைகள் பயனடையும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.