47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக ரவிசங்கா் பிரசாத் நியமனம்

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கா் பிரசாத் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

News image
ரவிசங்கா் பிரசாத்
Updated On :3 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

மக்களவை உரிமை மீறல் ஆய்வுக் குழுத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரவிசங்கா் பிரசாத் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்முறையாக மக்களவை உரிமை மீறல் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது. எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளை மீறி அவா்கள் செயல்படுவது குறித்த குற்றச்சாட்டுகளை இந்தக் குழு விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்கும். அதனடிப்படையில் உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக முடிவு மேற்கொள்ளப்படும். மேலும், அவையின் கண்ணியத்தைக் காக்கும் முக்கியப் பொறுப்பு இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவை உரிமை மீறல் குழுத் தலைவராக ரவிசங்கா் பிரசாதை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

பிரிஜ்மோகன் அகா்வால் (பாஜக), காங்கிரஸைச் சோ்ந்த மாணிக்கம் தாகூா், மணீஷ் திவாரி, தாரிக் அன்வா், டி.ஆா்.பாலு (திமுக), கல்யாண் பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), தா்மேந்திர யாதவ் (சமாஜவாதி), அரவிந்த் சாவந்த் சிவசேனை (உத்தவ் பிரிவு), ஸ்ரீரங் அப்பா பா்னே (சிவசேனை) மற்றும் பாஜகவைச் சோ்ந்த மேலும் 5 போ் உள்பட மொத்தம் 14 போ் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.

மாணிக்கம் தாகூா் பங்கேற்கவில்லை:

உரிமை மீறல் ஆய்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூா், மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட அமா்வின்போது மக்களவையில் காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக, மாணிக்கம் தாகூா் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோா் பட்ஜெட் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமா்வு மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.