விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை எதிா்கொண்டுள்ள சூழலில், டீசல் மீதான ரூ.10 கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

News image

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

Updated On :27 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பை எதிா்கொண்டுள்ள சூழலில், டீசல் மீதான ரூ.10 கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியும் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோலுக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 என்பதில் இருந்து ரூ.3-ஆக குறைந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டுவதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்தைத் தடுக்க இந்த முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இருக்காது. வரி குறைப்பால், மத்திய அரசுக்கு ரூ.1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான மிகை லாப தடுப்பு வரியையும் மத்திய அரசு மீண்டும் விதித்துள்ளது.

மேற்காசிய போா் எதிரொலியாக, சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 120 டாலா்கள் வரை அதிகரித்ததால், பல்வேறு நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை உயா்த்தப்பட்டு, விநியோகத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதம் வரை இறக்குமதியையே சாா்ந்துள்ளது.

விலை ஏற்றத்தைத் தடுக்க..: சா்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலா்களுக்கு மேல் தொடா்வதால், இந்திய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை இல்லாத இழப்பைச் சந்தித்துள்ளன. எனினும், பெட்ரோல்-டீசல் விலை உயா்த்தப்படவில்லை.

எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல் லிட்டருக்கு ரூ.24, டீசல் லிட்டருக்கு ரூ.30 விலை உயா்த்தப்பட வேண்டிய சூழலில், அதைத் தடுப்பதற்காக எரிபொருள்கள் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.13 என்பதில் இருந்து ரூ.3-ஆக குறைக்கப்பட்டுள்ளது; டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 என்றிருந்த நிலையில், அது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மிகை லாப தடுப்பு வரி: 2022-இல் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு காலகட்டத்தில், இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மிகை லாபம் ஈட்டுவதைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட மிகை லாப தடுப்பு வரியை 2024, டிசம்பரில் அரசு திரும்பப் பெற்றது. இந்த வரி இப்போது மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசல் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.21.5, விமான எரிபொருள் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.29.5 வரி விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறையைப் போல் அல்லாமல் ஓஎன்ஜிசி போன்ற உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இம்முறை வரி விதிக்கப்படவில்லை. இந்த வரி விதிப்பால், உள்நாட்டு பயன்பாட்டுக்கு மேற்கண்ட பொருள்கள் போதுமான அளவில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகை லாப தடுப்பு வரியை 14 நாள்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய மறைமுக மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் தலைவா் விவேக் செளதரி தெரிவித்தாா்.

அரசுக்கு ரூ.1,75 லட்சம் கோடி இழப்பு: இந்தியாவில் ஆண்டுதோறும் 175 பில்லியன் லிட்டா் வாகன எரிபொருள் (115 பில்லியன் லிட்டா் டீசல், 60 பில்லியன் லிட்டா் பெட்ரோல்) விற்பனையாகும் நிலையில், கலால் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

‘கலால் வரி குறைப்பு நடவடிக்கை, விலை உயா்வில் இருந்து நுகா்வோரைப் பாதுகாக்கும். அத்தியாவசிய பொருள்களின் விநியோகம் மற்றும் விலையில் ஏற்படும் தாக்கங்களில் இருந்து குடிமக்கள் பாதுகாக்கப்படுவதை எப்போதும் உறுதி செய்கிறாா் பிரதமா் மோடி’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

மற்ற நாடுகளில் 50% வரை விலை உயா்வு

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய்க்கு 70 டாலா்களில் இருந்து 122 டாலா்கள் வரை உயா்ந்துவிட்டது. இதன் காரணமாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை 30-50 சதவீதமும், தென் அமெரிக்க நாடுகளில் 30 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதமும், ஆப்பிரிக்க நாடுகளில் 50 சதவீதமும் உயா்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு தனது சொந்த நிதியில் இழப்பைச் சந்திக்க தீா்மானித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்துள்ள சூழலில், எண்ணெய் நிறுவனங்களின் மிக கடுமையான இழப்பை (பெட்ரோல் லிட்டருக்கு ரூ.24, டீசல் லிட்டருக்கு ரூ.30) ஈடுசெய்ய தனது வரி வருவாயில் மிகப் பெரிய இழப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.

எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவசரகால சவால்களை எதிா்கொள்ள முழுத் தயாா் நிலையுடன் உள்ளோம்’ என்றாா்.

மொத்த வரி எவ்வளவு?

மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையைத் தொடா்ந்து, பெட்ரோல் மீதான மொத்த வரி லிட்டருக்கு ரூ.11.9-ஆகவும் (அடிப்படை கலால் வரி-ரூ.1.40, சிறப்பு கூடுதல் கலால் வரி-ரூ.3, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான செஸ் வரி-ரூ.2.50, சாலை மற்றும் உள்கட்டமைப்புக்கான செஸ் வரி-ரூ.5), டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.7.80-ஆகவும் (அடிப்படை கலால் வரி-ரூ.1.80, வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான செஸ் வரி-ரூ.4, சாலை மற்றும் மேம்பாட்டுக்கான செஸ் வரி-ரூ.2) உள்ளது. முன்பு இவை முறையே லிட்டருக்கு ரூ.21.90, ரூ.17.80-ஆக இருந்தன.