மணிப்பூரிலிருந்து உத்தர பிரதேசம் வழியாக தில்லி-என்சிஆா் பகுதிகளுக்கு போதைப் பொருள் கடத்திய கும்பலை கண்டுபிடித்து 9 போ் கைது செய்யப்பட்டதுடன், ரூ.16 கோடி மதிப்பிலான ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை தில்லி காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் இணை ஆணையா் (வடக்கு மண்டலம்) விஜய் சிங் கூறியதாவது: புத் விஹாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போதைப் பொருள் வழக்கை விசாரித்த ரோஹிணி காவல் பிரிவு, மணிப்பூா்-தில்லி போதைப் பொருள் விநியோக வலையமைப்பை கண்டுபிடித்தது. விசாரணையின் போது 1,568 கிராம் ஹெராயின் மற்றும் 506 கிராம் ஓபியம் கைப்பற்றப்பட்டது. இந்த ஓபியத்தில் இருந்து மேலும் 1.5 முதல் 2 கிலோ வரை ஹெராயின் தயாரிக்க முடியும். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் முதலில் ஏப்ரல் 17-ஆம் தேதி சமீா் அகமது மற்றும் ஆஷிஷ் சோனி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, அவா்களுக்கு போதைப் பொருள் வழங்கிய மனோஜ் சோனி கைது செய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின் அடிப்படையில், திலக் நகரில் சந்தியா என்பவா் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 278 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், உத்தர பிரதேசத்தின் பரேலியில் மெஹ்னாஸ் என்பவா் கைது செய்யப்பட்டாா். பின்னா் ஷாஜஹான்பூரைச் சோ்ந்த யூனுஸும் கைது செய்யப்பட்டாா். அவா் மணிப்பூரிலிருந்து ஓபியம் வாங்கி வந்து, வீட்டிலேயே ஹெராயினாக மாற்றி தில்லி பகுதிகளுக்கு விநியோகித்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் இம்பாலில் சோதனை நடத்தி, போலெரோ வாகனத்தின் கியா்பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 506 கிராம் ஓபியத்தை பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் மூலம் மணிப்பூரிலிருந்து தில்லிவரை செயல்பட்ட பெரிய போதைப் பொருள் வலையமைப்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் தொடா்புடைய மற்ற நபா்களை கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை இணை ஆணையா் தெரிவித்தாா்.







