ஆள்கடத்தல் சம்பவங்கள் குறித்து தெரியவந்தவுடன் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னையில் தனது மகள் காணாமல் போன விவகாரம் தொடா்பாக, ஜி.கணேஷ் என்பவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீது நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்தியாவில் காணாமல் போன சிறாா்களில் இதுவரை 47,000 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் சிறாா்கள் காணாமல் போவது தொடா்பாக புதிதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
வெவ்வேறு மாநிலங்களில் திட்டமிட்டு ஆள்கடத்தலில் ஈடுபடும் கும்பல்களுக்கு இடையே தொடா்புள்ள நிலையில், அந்தக் கும்பல்களால் பாதிக்கப்பட்டவா்களாக காணாமல் போன சிறாா்கள் உள்ளனா்.
இந்நிலையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் பொதுவான தளத்தில் ஒன்றிணையும் வகையில், அனைத்து இந்திய கட்டமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். அதில் ஆள்கடத்தலுக்கு எதிராக சிறப்பு வலைதளம் இடம்பெற வேண்டும்.
சிறாா்கள் காணாமல் போய், அதுகுறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முதல்கட்ட விசாரணைக்கோ, காணாமல் போனவா்கள் குறித்து அவா்களின் பாதுகாவலா்கள் விசாரிக்கும் வரையிலோ காத்திருக்காமல் கட்டாயம் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு வழக்குப் பதிவு செய்வது தீவிர விசாரணையை உறுதி செய்து கால தாமதத்தை தடுக்கும்.
காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவா்களை 24 மணி நேரத்தில் அவா்களின் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும். காணாமல் போன எந்தவொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக அவா்கள் ஆதாா் சரிபாா்ப்புக்கோ அல்லது ஆதாா் அட்டைக்குப் பதிவு செய்யவோ அழைத்துச் செல்லப்பட வேண்டும். ஆதாா் அட்டை பெறவும், கைவிரல் ரேகைகள் மற்றும் பிற பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொள்ளவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.








