
உராங்குட்டான்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்! இந்தோனேசியா சந்தேகம்!
ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 உராங்குட்டான்கள் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பலா?

உராங்குட்டான்கள் - TNIE
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டும் வாழக்கூடிய அரிய வகை உயிரினமான உராங்குட்டான் எங்கள் நாட்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்தோனேசியா இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
செப். 8 அன்று ஒடிசா மாநில வனப்பகுதியில் ஐந்து உராங்குட்டான் குட்டிகள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் வனவிலங்கு ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தோனேசிய அரசு இந்தியாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 உராங்குட்டான் குட்டிகளும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சர்வதேச அளவில் செயல்படும் வனவிலங்கு கடத்தல் கும்பல், இந்தக் குட்டிகளை இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வந்து இந்தியாவில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகக் கூறியது.
டிஎன்ஏ பரிசோதனை
மீட்கப்பட்ட உராங்குட்டான் குட்டிகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு இந்தோனேசிய அரசு இந்தியாவை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில், இந்தோனேசியக் காடுகளைச் சேர்ந்தவை என்பது உறுதியானால், 5 உராங்குட்டான் குட்டிகளையும் சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக இந்தோனேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.
பின்னணியில் சர்வதேசக் கடத்தல்
இந்தியப் பூர்வீகமற்ற உராங்குட்டான்கள் எவ்வாறு ஒடிசாவுக்கு கொண்டுவரப்பட்டது, இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார் என்பது குறித்து இந்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியகமும், ஒடிசா வனத்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மீட்கப்பட்ட உராங்குட்டான்கள் தற்போது ஒடிசாவின் புவனேஸ்வரில் நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்தியக் காலநிலை அதற்குப் புதிதாக இருந்தாலும், மெல்லப் பழகி வருவதாகவும், ஐந்து குட்டிகளும் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





