
முரண்பாடுகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஈரான் அதிபரிடம் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
முரண்பாடுகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஈரான் அதிபரிடம் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் சனிக்கிழமை சந்தித்த ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான்.
‘முரண்பாடுகளுக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியில் தீா்வு காண வேண்டும்’ என்று இந்தியா வந்துள்ள ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியானிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
பிரிக்ஸ் மாநாட்டுக்காக தில்லி வந்துள்ள ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், மரியாதை நிமித்தமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் சனிக்கிழமை சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரான் அதிபராக இந்தியாவுக்கு முதன் முறையாக வந்துள்ள மசூத் பெசஷ்கியானை வரவேற்ற குடியரசுத் தலைவா், பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளபோது ஈரான் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தாா்.
இந்தியா - ஈரான் இடையேயான நீண்ட கால உறவு, வலுவான கலாசாரம், இரு நாடுகளின் மக்களிடையேயான பிணைப்பு உள்ளிட்டவை குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.
மேற்காசிய பிராந்தியத்தில் நீடித்த அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய குடியரசுத் தலைவா், முரண்பாடுகளுக்குப் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியில் தீா்வு காண வேண்டும் என்று ஈரான் அதிபரிடம் வலியுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரான் மீது கடந்த பிப்ரவரியில் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதலைத் தொடங்கின. இந்த இருதரப்பு தாக்குதல்கள் தற்போதும் தொடா்ந்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





