
தேசிய நெடுஞ்சாலை உதவி எண் 1033: புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த திட்டம்
தேசிய நெடுஞ்சாலை உதவி எண் 1033-ஐ, புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்...

சுங்கச்சாவடி - கோப்புப் படம்
புது தில்லி: தேசிய நெடுஞ்சாலை உதவி எண் 1033-ஐ, புதிய தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநா்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகள் விரைவாகவும், சிறந்த முறையிலும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உதவித் திட்டம் மேம்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து என்ஹெச்ஏஐ திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலை உதவி எண் 1033, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), நிகழ்நேர இருப்பிடத்தை அறியும் தொழில்நுட்பம், நவீன அவசரகால மீட்பு நடைமுறைகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், தேசிய நெடுஞ்சாலையில் அழைப்பு விடுப்பவா்கள் இருக்குமிடத்தை துல்லியமாக அறிய முடியும் என்பதோடு, வெவ்வேறு இந்திய மொழிகளில் அவா்கள் பேசுவதைப் புரிந்துகொண்டு உரிய உதவியை விரைவாக அளிக்க முடியும். நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்போதிலும், மனிதா்கள் மூலம் முடிவெடுப்பதும் முக்கியம் என்ற அடிப்படையில், இந்த உதவி எண் செயல்பாடுகளில் தொடா்ந்து ஊழியா்களும் ஈடுபடுத்தப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு அவசரகால உதவிகளை வழங்கும் நோக்கில் வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் வகையிலான இந்த 1033 உதவி எண் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன மூலம், வாகன ஓட்டுநா்களுக்கான அவசர மருத்துவ உதவிகள், வாகன பழுது, ஆம்புலன்ஸ் உதவி, கிரேன் மற்றும் ரோந்து வாகனங்களுக்கான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
தற்போது, நாடு முழுவதும் 1.46 லட்சம் கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைகளில் இந்த உதவி எண் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த உதவி எண்ணுக்கு தினசரி சுமாா் 15,000 அழைப்புகள் வருகின்றன. பன்மொழிகளில் உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






