29. கிருமிகள் வாழ்க! - 6

ஒரு மருத்துவரையும் பார்க்காமல், நாமாக எந்த மருந்தும் சாப்பிடாமல், ஓய்வு மட்டும் எடுத்துக்கொண்டு இருந்திருந்தால் காய்ச்சல் ஒரு சில நாட்களில் போயிருக்கும்.
அம்மை நோய் மாரியம்மனால் ஏற்படுகிறது என்று நம்பும் கிராமத்து மக்களின் நம்பிக்கையும், அம்மை நோய் கிருமிகளால் ஏற்படுகிறது என்று நம்பும் படித்தவர்களின் நம்பிக்கையும் மூட நம்பிக்கையே அன்றி வேறில்லை – தமிழ்வாணன்.

நம் தவறான வாழ்முறைகளால், இயற்கைக்கு எதிரான நம் செயல்களால் நம் உடலில் கழிவுகள் உருவாகின்றன, அவை நான்கு வகைப்படும் என்று இதுவரை பார்த்தோம். அவை:

1. சாதாரணக் கழிவுகள்

2. தேக்கமுற்ற கழிவுகள்

3. ரசாயனக் கழிவுகள்

4. அழுகிய ரசாயனக் கழிவுகள்

சாதாரணக் கழிவுகள் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. அது இயல்பானதும், இயற்கையானதுமாகும். தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை நமது உடல் வெளியேற்றிவிடுகிறது.

ஆனால், கழிவுகள் உடலில் தேங்கிவிடுமானால், தொந்தரவுகள் மூலம் அவற்றை அகற்ற உடல் முயற்சி செய்யும். அவை வெளியேற முடியாமல் நமது ‘அறிவார்ந்த’ நடவடிக்கைகள் இருக்குமானால், அக்கழிவுகள் ரசாயனக் கழிவுகளாக மாறும். அதை நீக்கவும் போக்கவும் லைசோசோம்கள் சண்டையிடும் என்பதுவரை பார்த்தோம்.

லைசோசோம்களையும் மீறி செல்லுக்குள் ஒரு கிருமி சென்றுவிடுமானால், உடனே, ஆமாம் கண்ணிமைக்குள் நேரத்துக்குள் இன்னொரு அமைப்பு அந்தக் கிருமியைச் சுற்றி ஒரு பலூனை உருவாக்கி அதற்குள் அந்த கிருமியை ‘அரெஸ்ட்’ செய்துவிடும். அதன் பெயர் ஃபேகோசோம் (phagosome). அந்த பலூன் சுவர்களுக்குள் லைசோசோம்கள் புகுந்து கிருமிகளைக் கொன்றுவிட்டு தானும் அழிந்துபோகும்! இதற்கு ஃபேகோசைட்டோசிஸ் என்று பெயர்(phagocytosis).

ஃபேகோசோம்

ஆனால் தொந்தரவுகளை பிரச்னை என்று நினைத்துக்கொண்டு மேலும் மேலும் விஷத்தன்மையுள்ள ரசாயன அலோபதி மாத்திரை மருந்துகளை நாம் எடுத்துக்கொண்டே இருந்தோமானால், பாவம் நம் உயிரணு என்னதான் செய்யும்? ரசாயனக் கழிவுகள் அழுகிப் போக ஆரம்பிக்கும்!

அந்த நிலையில்தான் கிருமிகள் தோன்றும்.

எனவே, இங்கே நாம் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், கிருமிகள் உடலுக்கு வெளியிலிருந்து உருவாகி, உடலைத் தாக்கி, உடலுக்குள் புகுந்து பிரச்னை செய்வதில்லை. அவை உடலுக்குள்ளேயே இருக்கும் அழுகிய ரசாயனக் கழிவுகளில் இருந்து உருவாகின்றன. கழிவுகளின் நிலை மாற்றமே கிருமிகளின் ஜனன ஸ்தானம். ஜனன நேரமும் அதுதான். சாலையில் செத்து நாறிக்கிடக்கும் நாயின் அழுகிய உடலின் பாகங்களில் இருந்து புழுக்கள் உருவாவதைப்போல நம் உடலுக்குள்ளிருந்தே அவை உருவாகின்றன.

கழிவுகள் தேங்கிய நிலையில் இருக்கும்போது சின்னச் சின்ன தொந்தரவுகள் மூலம் அக்கழிவுகளை அகற்ற உடல் முயல்கிறது. அக்கழிவுகள் ரசாயனக் கழிவுகளாக மாறும்போது, லைசோசோம் போன்ற தற்காப்புத் தற்கொலைப் படையை உருவாக்கி கிருமிகளை அழிக்க முயல்கிறது. அதையும் மீறி ரசாயனக் கிருமிகள் அழுகிப் போகுமானால், அப்போது நமது எதிர்ப்பு சக்தியானது அவற்றைக் காலி செய்ய கிருமிகளை உருவாக்குகிறது.

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நம் உடலில் கழிவுகள் எங்குமே தேங்கி இருக்கக்கூடாது. எனவே, நம் உயிர் உள்ளவரை கழிவு நீக்கம் எந்த வழியிலாவது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். ஆஹா, எவ்வளவு அற்புதமான படைப்பு நம் உடல்! அறிவு அல்லது பேரறிவு என்ற பெயர் இறைவனுக்கு மட்டுமே பொருத்தமான பெயர்!

கிருமிகள் எங்கிருந்து வருகின்றன? அவை என்ன செய்கின்றன? மீண்டும் அவை எங்கே போகின்றன? போன்ற கேள்விகளுக்கு அறிவார்ந்த உலகத்தில் ஆணித்தரமான பதில்கள் கிடையாது. எல்லாம் அனுமானமான பதில்கள்தான். ஆனால் இப்போது நமக்குத் தெரியும். அழுகிய ரசாயனக் கழிவுகளில் இருந்து கிருமிகள் உருவாகின்றன. அவை எங்கே போகின்றன? கழிவுகள் அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, அதாவது இல்லாமலாக்கிவிட்டு, அந்தக் கிருமிகளும் இல்லாமல் போகின்றன. கழிவுகள் தீர்ந்த பிறகு, கிருமிச் சாப்பாடு காலியான பிறகு, சாப்பாடு இல்லாமல் அக்கிருமிகள் தாங்களாகவே அழிந்து போகின்றன!

ஒரு உதாரணம் பார்க்கலாம்.

ஒருவருக்கு காய்ச்சல் வருகிறது. முதல் நாள் பரிசோதனையில் ஒன்றுமிருக்காது. வெறும் காய்ச்சல்தான். உடனே அவருக்கு ஊசி போடப்படும். அல்லது ஜுரம் தணிப்பதற்கான மெடாசின், க்ரோசின், மாலிடென்ஸ் போன்ற ‘பாராசிடமால்’ குடும்ப மாத்திரைகள் ஏதாவது கொடுக்கப்படும். சிலருக்கு இரண்டு ஊசிகள் போட்டால்தான் நிம்மதி ஏற்படும். நான் வேலை பார்த்த ஊரில் ஒரு அம்மா அப்படித்தான். வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு ஜுரம் வந்துவிடும். குறிப்பிட்ட ஒரு டாக்டரைத்தான் அவர் பார்ப்பார். அந்த டாக்டரோ இரண்டு ஊசிகள்தான் எப்போதும் போடுவார். நான் பார்த்த நோயாளிக்கும் இரண்டு ஊசிகள் போட்டால்தான் நிம்மதியாக இருக்கும். அவரே என்னிடம் சொன்னது இது! நான் அந்தப் பகுதியில் இருந்த ஐந்தாண்டுகளும் வாரம் தவறாமல் அவருக்கு காய்ச்சல் வரும். வாராவாரம் இரண்டு ஊசிகள். ஒன்று மேலே, ஒன்று கீழே!

காய்ச்சல் வந்து, பரிசோதனையில் அது சாதாரண காய்ச்சல் என்று சொல்லப்பட்டு, ஒரு வாரத்துக்கு மருந்துகள் மாத்திரைகள், ஊசிகள் என்று எடுத்துக்கொண்டிருந்தால், அவற்றில் உள்ள விஷம் யாவும் உடலுக்குள் ஊடுருவி கழிவுகளைத் தேங்கவைக்கின்றன. ரசாயனக் கழிவுகளாக மாற்றுகின்றன. அழுக வைக்கின்றன.

ஒரு மருத்துவரையும் பார்க்காமல், நாமாக எந்த மருந்தும் சாப்பிடாமல், ஓய்வு மட்டும் எடுத்துக்கொண்டு இருந்திருந்தால் காய்ச்சல் ஒரு சில நாட்களில் போயிருக்கும். ஆனால், அலோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டதால் நோய் தீவிரமடைகிறது. ஏனெனில், அலோபதி மருந்துகளில் அனைத்திலும் ரசாயன விஷம் உள்ளது மட்டுமல்ல, நம் உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை வேலை செய்யவிடாமல் ஸ்தம்பிக்கவைக்கும் சக்தியும் உள்ளது. எனவே, எந்த வழியிலும் நாம் குணமடைந்துவிடக்கூடாது என்பதில் அலோபதி மருந்துகள் மிகத்தெளிவாக உள்ளன!

கழிவுகளின் தன்மையைப் பொருத்து காய்ச்சலின் தன்மை மாறுகிறது. உதாரணமாக, கழிவுகளை வெளியேற்ற ஆர்போ என்ற வைரஸ் உருவாகியுள்ளது என்று கொள்வோம். அந்த வைரஸைக் காப்பாற்றி, அது சரியாக வேலை செய்வதற்காக நமது உடல் ‘இன்டர்ஃபெரான்’ என்ற புரதத்தைச் சுரக்கிறது. இந்த நிலையில் உங்கள் காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்தால் உங்களுக்கு ’டெங்கு’ வந்திருப்பதாகச் சொல்வார்கள்!

இன்டர்ஃபெரான்

டெங்கு வைரஸான ஆர்போவின் வாழ்நாள் இரண்டு வாரம்தான். இரண்டு வாரங்கள் நம் உடலில் தங்கி டெங்குவை உண்டு, டெங்குவை காலி செய்துவிட்டு அதுவும் செத்துப்போகும். ஆனால் டெங்கு என்பது ஒரு பயங்கரமான வியாதி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, உங்களைத் தனிமைப்படுத்தி, ஒரு மாதத்துக்குக்கூட மருத்துவமனைகளில் வைத்திருப்பார்கள்! ஏனெனில் அப்போதுதான் அவர்களது வருமானம் கூடும்! டெங்குவுக்கான ஒரு எழவு மருந்தும் அவர்களிடம் கிடையாது. சாதாரண காய்ச்சலுக்கான மருந்துகளைத்தான் கொடுத்திருப்பார்கள். ஆனால் சிறப்பு மருந்துகள், சிறப்பு கவனிப்புகளுக்கான சிறப்பு ‘ஃபீஸ்’ மறக்காமல் வாங்கிக்கொள்வார்கள்!

ஆர்போ வைரஸ்

இன்னொரு உதாரணம். சாதாரண சளி உருவாகிறது என்றால் அது வெளியேறாமல் நாம் வழக்கம்போல் மருந்து மாத்திரைகள் மூலம் அதை அடக்கி வைத்தோமானால், அது தேக்கமடைந்து, ரசாயனமாக மாறி, அதுவும் அழுகிய பின்னர்தான் டி.பி. கிருமிகள் உருவாகும். நோய் எது, ஆரோக்கியம் எது என்று இப்போது புரிகிறதா?

சமீபத்தில் வாட்ஸப்பில் ஒரு மருத்துவ ஜோக் வந்தது. அதில் டாக்டரிடம், “டாக்டர், எனக்கு சொத்து நிறைய இருக்கிறது. ஆனால் என்ன செய்ய, கிட்னியில் கல் வந்துவிட்டது” என்று நோயாளி கூறுகிறார். அதற்கு டாக்டர், “கவலைப்படாதீர்கள், இரண்டையுமே கரைத்துவிடலாம்” என்று கூறுகிறார்! இப்படித்தான் நடந்துகொண்டுள்ளது. உஷாராக இருக்கவேண்டியது நாம்தான்!

கிருமிகளைப் பற்றி ஓரளவு சொல்லிவிட்டேன். கிருமிகள் நன்மை செய்பவையே என்பதும், அவற்றை நன்மை செய்யவிடாமல் தடுப்பது நாம்தான் என்பதும் புரிந்திருக்கும். இதனால்தான் அம்மை நோய் பற்றிய கிராமத்து மக்களின் நம்பிக்கையும், நகரத்து மக்களின் நம்பிக்கையும் மூட நம்பிக்கைகளே என்று மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறார் தமிழ்வாணன். ஆனால் கிராமத்து மக்களின் வழிமுறைகளும் நகரத்து படித்தவர்களின் வழிமுறைகளும் ஒரே மாதிரியானவை அல்ல. இதில் பின்பற்றத் தகுந்தவர்கள் படிப்பறிவில்லாத கிராமத்து மக்களே!

தமிழ்வாணன்

ஆம். நகரத்து மக்கள் அம்மை வந்தால் தடுப்பு மருந்துகள் (ரசாயனம்) எடுத்துக்கொண்டார்கள். தடுப்பூசிகள் (ரசாயனம்) போட்டுக்கொண்டார்கள். ஆனால், அம்மைக்காக முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தும் ஊசியும் தடை செய்யப்பட்டு, புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிக்க ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன என்கிறார் ஹீலர் உமர் (பக்கம் 67).

வழிமுறைகளைப் பொருத்தமட்டில் நம் மண்ணின் மைந்தர்கள்தான் சரி. முக்கியமாக

  • வேப்பிலைப் படுக்கையில் படுக்க வைப்பது
  • வீட்டு வாசலில் அம்மை வந்திருப்பதற்கு அடையாளமாக வேப்பிலை கட்டி வைப்பது
  • சுத்தபத்தமாக இருப்பது
  • நோயாளியை ஓய்வாக வைத்திருப்பது
  • ரொம்ப பசித்தால் மட்டும் சமைக்காத உணவு, பழங்கள் என கொடுப்பது

என அவர்களது வழிமுறைகள் ரொம்பச்சரி. ஏன்? ஏனெனில், முதலில் ஒரு நோயாளி ஓய்வாக இருந்தால் அவருடைய இயக்க வாழ்வுக்குத் தேவையான சக்தியெல்லாம் சேமிக்கப்படும். திரவ உணவு, அல்லது சமைக்காத உணவு, பழங்கள் என பசிக்கும்போது மட்டும் கொடுப்பதால், ரொம்பக் கஷ்டபட்டு எதையும் ஜீரணிக்கத் தேவையில்லாமல், அந்தச் சக்தியும் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்தியோடு இணைந்து விரைவில் நோய் குணமடைய வழிவகுக்கும்.

அம்மை வந்துவிட்டால் உடல் அதிக உஷ்ணமடைந்துவிடும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. வேப்பிலையானது குளிர்ச்சியைத் தரும். குளிக்க முடியாவிட்டாலும், குளியல் தருவதைவிட உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அது கொடுத்துவிடும்.

இதில் வேப்பிலையின் பயன்பாடு எக்ஸ்டா ஃபிட்டிங்தான் என்கிறார் ஹீலர் உமர்! வேப்பிலையைப் பயன்படுத்தாமல் மற்ற வழிமுறைகளைப் பயன்படுத்தினாலும் அம்மை நோய் சரியாகிவிடும் என்கிறார் அவர்.

பெரும்பாலானவர்களை பயமுறுத்தும் மஞ்சள் காமாலை நோயும் இப்படிப்பட்டதுதான். அதுவும் கிருமிகளால் வருவதே என்று கூறுகிறது மருத்துவ விஞ்ஞானம். ஆனால் அதுவும் ஒரு நோயே அல்ல. அதுவும் கழிவு நீக்கம்தான். இதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். அப்போதுதான் கிருமிகளின் தன்னலமற்ற சேவையைப் புரிந்துகொள்ள முடியும்.

நம் ரத்தத்தில் கழிவுகள் இருக்கும். அவை சாதாரணமான கழிவுகளாக இருந்தால் அவை சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படும். நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளாக இருந்தால் அவை கல்லீரலால் வெளியேற்றப்படும். கல்லீரல் அக்கழிவுகளை பித்தப்பையில் போட்டு வைக்கும். கல்லீரலின் துணையோடு பித்தப்பை அந்த நச்சுக்கழிவுகளை அழித்துவிடும்.

ஆனால், பித்தப்பையில் உள்ள கழிவுகள் அளவு மீறும்போது அவை ரத்தத்தில் கலந்துவிடும். அப்படி நடந்தால் அக்கழிவுகளை மீண்டும் சிறுநீரகம் பிரித்து, சிறுநீரின் வழியாக வெளியேற்றும். அப்படி மஞ்சளாக கழிவு வெளியேறுவதைப் பார்த்துத்தான் நாம் ஐயையோ மஞ்சள் காமாலை வந்துவிட்டது என்று அலறுகிறோம். சிறுநீர் மஞ்சளாகப் போனால் மஞ்சள் காமாலை வந்துவிட்டது என்று அர்த்தமா அல்லது வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்று அர்த்தமா என்று ஒரு அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்கிறார் ஹீலர் உமர்! சரியான கேள்விதான். சிறுநீரில் கெட்ட சர்க்கரை வெளியாகிக்கொண்டிருப்பதை அளந்து பார்த்துவிட்டு ‘உங்களுக்கு சுகர் வியாதி வந்துவிட்டது’ என்று சொல்லும் பரிசோதனையும் இதுவும் ஒன்றுதான். சிந்தியுங்கள்.

முடிவாக சில தகவல்கள்

கிருமிகளைப் பற்றி இறுதியாகச் சில விஷயங்கள் சொல்லவேண்டி உள்ளது. தீமை செய்யும் கிருமிகள் கொஞ்சூண்டு உண்டு என்று சொன்னோமல்லவா? அந்த கொஞ்சூண்டு எப்படி வேலை செய்கிறது? அதற்கும் நாம்தான் காரணம்! எப்படி?

எதிர்ப்பு சக்தி நமக்குக் குறைவாக இருக்குமானால், நம் உடலில் கழிவுகளின் தேக்கம் இருந்து, அவற்றை வெளியேற்றுவதற்கான சக்தி நம்மிடம் இல்லாவிட்டால், நாம் அனுமதித்தால், வெளியிலிருந்து நம் உடலுக்குள் கிருமிகள் செல்லும் வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கேயும் நாம் தெளிவாக இருக்கவேண்டி உள்ளது.

ஒருவரின் உடலுக்குள் தேங்கியுள்ள அழுகிய ரசாயனக் கழிவுகள் டைஃபாய்டாக இருந்தால் அதை உண்ணும் கிருமிகள்தான் அவருக்குத் தேவை. அவருடைய உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து, அவர் மிகவும் பலவீனமான ஆளாக இருந்தால், அவருடைய உடலால் புதிய உயிர்களை (கிருமிகளை) உண்டாக்கிக்கொள்வதற்கான ஆற்றல் இல்லாத சூழ்நிலையில், புறச்சூழலை அவர் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

புறச்சூழல் என்றவுடன் வெளியில் உள்ள சாக்கடை போன்ற எல்லா அசிங்கமான, அசுத்தமான இடங்களிலும் கிருமிகள் இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. உடலில் கிருமிகள் உண்டாக எந்தச் சூழ்நிலை காரணமாக இருந்ததோ, அதேபோன்ற சூழல் வெளியுலகில் இருந்தால் அங்கேயும் கிருமிகள் உண்டாகும் வாய்ப்பு உண்டு. இப்படி புறச்சூழலில் இருந்து தன்னை நோக்கி வரும் கிருமிகளை நோயுற்ற, பலவீனமான உடல் அனுமதிக்கிறது. இதைத்தான் நாம் நோய் பரவுகிறது என்பதாகப் புரிந்துகொள்கிறோம்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஏழு பேரில் நாலு பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஒருவரால் இன்னொருவர் பாதிக்கப்பட்டார் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அந்த நாலு பேருக்கும் உடலுக்குள் கழிவுகள் ஒரே மாதிரியாகத் தேக்கம் கண்டுள்ளன என்று அர்த்தம். எனவே, ஒரே மாதிரியான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், குடும்பத்தில் உள்ள மற்ற மூன்று பேருக்கு அது ஏன் வரவில்லை என்று யோசிக்க வேண்டும். அவர்களின் எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளது, அவர்களிடம் கழிவுத்தேக்கம் எதுவும் இல்லை என்று அர்த்தம்.

உலகம் பூராவுக்கும் இந்தப் புரிந்துகொள்ளலை விரிவுபடுத்தலாம். படுத்த வேண்டும். அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் எய்ட்ஸ் வந்துவிட்டால், அங்கிருந்து ஒருவர் இந்தியாவுக்கு வந்துவிட்டால், அவர் மூலமாக மற்றவருக்கும் எய்ட்ஸ் பரவிவிடும் என்ற அச்சம் அர்த்தமற்றது என்பது இதுவரை உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும்.

ஒரே மாதிரியான கழிவுத் தேக்கம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் ஒரே மாதிரியான தொந்தரவுகளுக்கு உள்ளாவர். நாடுவிட்டு நாடு ஒரு நோய் பரவிவிட்டது என்று இதை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம்.

எனவே, கைகுலுக்கினால் நோய் பரவும், கட்டிப்பிடித்தால் நோய் பரவும் என்றெல்லாம் நினைப்பது அபத்தமாகும்.

மேலே சொன்ன மாதிரியாக நிகழ்வது அபூர்வம். சாதாரணமாக ஒருவர் உடலிலிருந்து இன்னொருவர் உடலுக்குக் கிருமிகள் செல்லாது. அது ஒரு அசாதாரண நிலை. கிருமிகள் நம் உடலுக்குள் புகுவதற்கு இன்னொரு வாய்ப்பு நமக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் நேரம். நம் உடலைக் காக்கும் கவசமான தோல் கிழிக்கப்படும்போது, திறந்திருக்கும் அந்த வாசல் வழியாக கிருமிகள் எளிதாக எதிர்ப்பு சக்தி குறைந்த உடலுக்குள் புகுந்துவிடும். எதிர்ப்பு சக்தி வேலை செய்யவிடாத மருந்துகளையும் நமக்கு ஏற்கெனவே கொடுத்திருப்பார்கள்! இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

கிருமிகளால்தான் நோய்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையெனில் மனித சமுதாயம் முழுவதும் உயிர்பிச்சை கேட்டு கிருமிகளிடம் கையேந்தி நிற்கவேண்டியதுதான் என்றார் அமெரிக்க டாக்டர் ஹென்றி லிண்ட்லார். ஆனால் அது உண்மையல்ல என்று ஓரளவு தெரிந்துகொண்டோம். இதுவரை தெரிந்துகொண்டதிலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும்?

கிருமிகளுக்கு நன்றி சொல்லவேண்டும்.

கிருமிகள் என்றாலே ஏதோ கெட்ட வார்த்தைபோல எண்ணிக்கொண்டிருக்கிறோம். எனவே, இனிமேல் கிருமிகள் என்று சொல்லவேண்டாம். நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் என்று சொல்லலாம்.

ஆங்கிலத்தில் elf என்றொரு சொல் உள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் அவர்கள் பாத்திரங்களாக வருவார்கள். காதலர்களுக்கு உதவுவார்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாத குட்டி தேவைதைகள். கிருமிகள் எனப்படும் நுண்ணுயிர்கள் அப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத குட்டி தேவதைகள்தான். அவர்களால் நமக்கு நன்மையே விளைகின்றன. கண்ணுக்குத் தெரியாதவற்றில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு இந்த வேத நூல் வழிகாட்டும் என்கிறது திருக்குர்’ஆன் (சூரா பகரா).

நாமும் நம்பிக்கை வைப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com