தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

அதிகாரம் - 1. கடவுள் வாழ்த்து 

கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம். 

News image
Updated On :26 மே 2017, 9:58 am

அதிகார விளக்கம்
 

கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துகொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் - தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த அவரே குரு. அறியாமையை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணங்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம். 

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 

 
அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம்.

*

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து என்ன பயன்?

*

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.

*

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

தேவை, தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை அடைந்தவருக்குத் துன்பம் என்றும் இல்லை.

*

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இருளாகும் இரு வினைகளை சாராது, இறைவனை புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.

*

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.

*

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

நிகரற்றவனின் நிழலை அடைந்தால் அன்றி, மனக்கவலைகள் மாறுவது இயலாது.

*

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

முடிவை புரிந்துகொண்ட இயல்பானவனின் நிழலை அடையாவிட்டால், பிறவி அறுப்பது கடினம்.

*

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை; எண் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.

*

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவன் அடி சார்ந்தால் பிறவிக் கடலில் நீந்தலாம்; இல்லையேல், நீந்த முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.