கண்டது
(சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் ஓர் உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு காமிரா விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகம்)
'மேலே இருப்பவன் பார்த்துக்கிட்டு இருக்கான்!'
-ஜே.மகரூப், குலசேகரன்பட்டினம்.
(கோவா மாநிலத்தில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதியின் பெயர்)
'போண்டா.'
-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.
(கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இரு ஊர்களின் பெயர்)
'குதிரைசந்தல், கரடிசித்தூர்'
-எச்.ஷாகுல், கடலூர்.
கேட்டது
(சென்னை செங்குன்றத்தில் ஒரு வீட்டில் தம்பதியர்)
'இந்தச் சாப்பாட்டை மனுஷன் சாப்பிடுவானான்னு ஏன் குரலை உயர்த்துனீங்க?'
'இப்ப அதுக்கென்ன?'
'வாசல்ல வெயிட் பண்ணச்சொன்ன பிச்சைக்காரனைக் காணலை!'
-த.சீ.பாலு, சென்னை.
(கும்பகோணத்தில் உறவினர் வீட்டில் குழந்தைகளும் அப்பாவும்)
'பேய்க்கு ஒத்த ஜடையா, ரெட்டை ஜடையா... டாடி?'
'ஜடை பற்றி எனக்குத் தெரியாது; ஜாடைதான் தெரியும்!'
-வி.ரேவதி, தஞ்சை.
(கோவை கே.கே.புதூரில் கணவன், மனைவி)
'பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கணும்னு
அரசாங்கம் சொல்லியிருக்கு...!'
'அதுக்காக, எங்கம்மா வீட்டுக்கு என்னை நடந்தே போகச் சொல்றது நல்லாயில்லை!'
-எம்.பி.தினேஷ், கோவை.
யோசிக்கிறாங்கப்பா!
'எல்லாம் தெரிஞ்சவன் பேசமாட்டான்...
ஒண்ணுமே தெரியாதவன் பேசாம இருக்கமாட்டான்!'
- க. பூமலை, நமசிவாயபுரம்.
மைக்ரோ கதை
'எதுக்கு உங்களுக்கு இத்தனை கஞ்சத்தனம்?' என்றாள் மனைவி கோமதி, கணவர் பிரகாசத்திடம்.
'என்னடி சொல்ற?' என்றார் பிரகாசம்.
'நம்மகிட்ட கோடிக்கணக்கான சொத்து இருக்கு. நாம எப்பவோதான் குலதெய்வக் கோயிலுக்கு வர்றோம். இங்கே இருக்கிற யாசகர்களுக்கு நீங்க ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்கு மேல போடமாட்டேங்கறீங்களே... கொஞ்சம் அதிகமாப் போட்டாதான் என்ன?' என்றாள் சற்று கடுப்பாக கோமதி.
'பணம் இருக்குங்கறதுக்காக இவங்களுக்கு ஆயிரம் ஆயிரமாவா கொண்டு வந்து கொட்டச் சொல்றீயா?' என்றார் நக்கலாக பிரகாசம்.
அப்போது, 'ஏங்க, அங்க பாருங்க...?' என்று மனைவி காட்டிய இடத்தைப் பார்த்தார் பிரகாசம்.
அங்கு யாரோ தனக்குக் கொடுத்துவிட்டுப் போன பார்சல் சாப்பாட்டை அருகில் படுத்திருந்த நாயுடன் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வயதுமுதிர்ந்த யாசகர் ஒருவர்.
அதைப் பார்த்த பிரகாசத்துக்கு சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது.
'இதுவரை பணம் இருந்தால்தான் பெரிய மனுஷன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். இந்த நிகழ்வைப் பார்த்ததும் கருணையோடு இருக்கறதுதான் உண்மையான பெரிய மனுஷனுக்கு அழகுன்னு புரிஞ்சிக்கிட்டேன். இனி என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்வேன்' என்றார் பிரகாசம்.
-சிவம், திருவள்ளூர்.
எஸ்.எம்.எஸ்.
'அதிர்ஷ்டம் என்பது நமக்கான வாய்ப்பை நாம் மிகச்சரியாகக் கண்டுபிடிப்பதுதான்.'
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம் .
அப்படீங்களா!
கூகுளின் ஜி-மெயில் சேவையைப் பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். கடந்த சில ஆண்டு
களாக வாட்ஸ்ஆப் செயலி கணக்கு, கூகுள் போட்டோஸ் போன்றவற்றில் இ-மெயில் முகவரி இணைப்பு கட்டாயமாகிவிட்டது.
இதனால் ஒவ்வொரு ஜி-மெயில் முகவரிக்கும் அந்த நிறுவனம் அளிக்கும் 15 ஜி.பி. தரவு சேமிப்பு இடம் விரைவில் தீர்ந்துவிடுவதால், கூடுதல் தரவு சேமிப்பு இடத்துக்கு கூடுதல் கட்டணத்தை கூகுள் நிறுவனம் வசூலித்து வருகிறது.
இந்தக் கட்டணத்தைச் செலுத்த முன்வராத ஏராளமானோர் புதியதாக ஜி-மெயில் முகவரிகளை இலவசமாக உருவாக்கத் தொடங்கினர். இந்த முகவரிகள் சில நாள்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு பின்பு கைவிடப்படுகின்றன. இதனால் தரவு சேமிப்புக்காக இடமும் செலவும் கூகுள் நிறுவனத்துக்கு அதிகரிக்கிறது. இந்நிலையில், புதிதாக ஜி-மெயில் தொடங்கு
பவர்களுக்கு முதலில் 5 ஜி.பி.சேமிப்பை மட்டுமே அந்த நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. அதன் பிறகு கைப்பேசி எண்ணை பதிவிட்டால் மட்டுமே அதை 15 ஜி.பி.-யாக அதிகரித்து கூகுள் நிறுவனம் வழங்குவதாகப் பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கட்டுப்பாட்டால் தேவையற்ற இ-மெயில்கள் உருவாக்கப்படுவது தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த முறை பழைய வாடிக்கையாளர்களைப் பாதிக்காது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


