அண்மையில் ஒரு கார் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கிச் சென்றபோது காரைக்காலில் விபத்தில் சிக்கியது. அந்த கார் விபத்தில் சிக்கியபோதுதான், போலீஸாருக்கே அதனுள் மது பாட்டில் பெட்டிகள் இருந்தது தெரியவந்தது. விபத்து இல்லையெனில் தாராளமாக அந்த வாகனம் எல்லையைக் கடந்திருக்கும். காரைக்காலில் பிரதான போக்குவரத்து சாலைகளின் எல்லையில் சோதனைச் சாவடிகள் இருந்தாலும், போலீஸார் கண்காணிப்பு இருக்கும் என்பது உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் காரைக்கால் எல்லையை ஒட்டிய தமிழகப் பகுதியில், காரைக்காலில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்ய வலுவான வகையில் தமிழக போலீஸாரைக் கொண்ட சோதனை சாவடிகள் உள்ளன. இருந்தும் இருமாநில போலீஸாரும் கண்டும் காணாமல் இருப்பதன் விளைவு, தரம் மற்றும் தரம் குறைந்த மது வகைகள் வாக்காளர்களுக்குப் போய்சேரவே உதவுகிறது. மேலும் பாக்கெட் சாராயம்கூட கடத்தப்படுவதாக புகார் உள்ளது. மது வகைக் கடத்தலை இருமாநில உரிய துறைகளும் கட்டுப்படுத்தவில்லை எனில், சமூக விரோதச் செயல்கள் தேர்தலின்போது தலை தூக்கவும், நியாயமற்ற தேர்தல் நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.