சேலம், ஜூன் 27: சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் தரகர்கள் மூலம் லஞ்சம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தி வருகின்றனர்.
தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம், சலுகைகளை வழங்காமல் அரசு வஞ்சித்து வருகிறது. 8 மணி நேர வேலை, மிக நேர ஊதியம், வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம் என்பது போன்ற உரிமைகள் மறுக்கப்படுகிறது.
அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டும் மேற்பார்வையாளருக்கு ரூ.5 ஆயிரம், விற்பனையாளருக்கு 3,600, உதவியாளருக்கு ரூ.2,700 மட்டும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் டாஸ்மாக் பணியாளர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் சலுகைகள் வழங்க மறுத்தனர். ஆனால் அந்த நிலையே மீண்டும் தொடருகிறது.
டாஸ்மாக் கடைகளில் இருக்கும் ஊழியர்களிடம் அரசியல் கட்சியினர், அதிகாரிகள் உள்ளிட்டோர் தரகர்களை வைத்து மாமூல் வசூலிக்கின்றனர். வழங்க மறுப்பவர்களுக்கு இடமாறுதல் போன்ற தண்டனைகள் வழங்குகின்றனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலேயே உள்ளன. ஆனால் கடையில் திருட்டு நடைபெற்றால் அந்தத் தொகையை ஊழியர்களிடம் இருந்தே வசூலிக்கும் நிலை நிலவி வருகிறது. இதுபோன்ற குறைகளை களைவதற்காகவே 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றனர் அவர்கள்.
முன்னதாக போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே செவ்வாய்க்கிழமை வசூலான தொகையை செலுத்திவிட்ட பிறகே போராட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.