புவனகிரி அருகே பெருமாத்தூர் பகுதியில் ஒஎன்ஜிசி நிறுவனம் கேஸ் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் எடுக்கப்படும் கேஸ் கெயில் நிறுவனம் மூலம் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பைப்புகள் வழியாக வடலூர் வரை கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்திற்கு அருகாமையில் உள்ள தரிசு நிலத்தை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் தீப்பரவி கேஸ் பைப்புகள் பாதித்து பெரும் தீவிபத்து ஏற்படும் என்பதால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தரிசு நிலத்தில் ஏற்பட்ட தீயிணை மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.