பிரதமருக்கு அளித்த விருந்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த நரியால் பரபரப்பு
இந்தியா-ஜெர்மனி இடையே உயர் கல்வி ஆராய்ச்சி, மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட 6 முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையெழுத்தாகின.


இந்தியா-ஜெர்மனி இடையே உயர் கல்வி ஆராய்ச்சி, மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட 6 முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையெழுத்தாகின.
பிரதமர் மன்மோகன் சிங், 3 நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றுள்ளார். அவருடன் மத்திய அமைச்சர்கள் சிலரும் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் 2ஆவது நாளான வியாழக்கிழமை, இரு நாடுகளுக்கிடையிலான இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இரு நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உயர்கல்வி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு ரூ.50 கோடி செலவிட வகை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தலா ரூ.25 கோடியை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.
ஜெர்மனி மொழியை அன்னிய மொழியாக மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. ஜெர்மனி மொழி கூட்டு திட்டத்தை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இப்போது 30,000 மாணவர்கள் ஜெர்மனி மொழி பயில்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க புதிய ஒப்பந்தம் வகை செய்யும்.
மரபுசாரா எரிசக்தித் துறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் வியாழக்கிழமை கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், மரபுசாரா எரிசக்தியை பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்வதற்கு ரூ.7,100 கோடி மதிப்பிலான கட்டமைப்பை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும்.
இதுதவிர, வேளாண்மை, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி உள்பட மொத்தம் ஆறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமருடன் சென்றுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு கூறுகையில், ""இந்தியா மற்றும் ஜெர்மனியின் பலம் என்ன என்பதை இரு நாடுகளும் பரஸ்பரம் நன்கு தெரிந்து வைத்துள்ளன. கல்வித் துறையின் சில பிரிவுகளில் இரு நாடுகளும் கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜெர்மனி, சென்னை மற்றும் மன்டி ஐஐடி-களின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது'' என்றார்.
ஜெர்மனியில் 4500 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதாக புள்ளி விவரம் கூறுகிறது. இதுபோல, ஜெர்மனியைச் சேர்ந்த 800 மாணவர்கள் இந்தியாவில் தொழில்பழகுநர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விருந்தில் நுழைந்த "நரி'
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வியாழக்கிழமை அளித்த விருந்தில் அழையா விருந்தாளியாக நரி ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடும் பாதுகாப்பையும் மீறி ஜெர்மன் பிரதமர் இல்லத்துக்குள் நுழைந்த நரி அங்கு சிறிது நேரம் உலவி விட்டு தானாகவே திரும்பிச் சென்று விட்டது.
பிரதமருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் திடீரென நரி நுழைந்ததால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...