சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற பெராம்பட்டு காலனியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் சிவகுரு (14) முதலை கடித்து படுகாயமுற்றார். இவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று முதலை கடித்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் சிவகுருவை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் போதிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏவுடன் அண்ணாமலைநகர் செயலாளர் ராஜா, தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஜாகீர்உசேன் ஆகியோர் உடன் சென்றனர்.