விருதுநகர் மாவட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பட்டாசு ஆலைகளை கண்காணித்து தணிக்கை செய்வதற்கு உயர்மட்ட ஆய்வுக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
விருதுநகர் மாவட்டத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் பட்டாசு ஆலைகள் விதிமுறைகள் மீறியும், அனுமதி பெறாமலும் செயல்பட்டு வருவதை முறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்பகுதி பொதுமக்கள் சிலரால் மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சில விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்ற வலியுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில் உரிமம் பெற்ற, பெறாத தொழிற்சாலைகளை கண்காணிக்க உயர்மட்ட ஆய்வுக் குழு அமைத்து தணிக்கை செய்து, விதிமுறை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் பட்டாசு ஆலைகளை கண்காணிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர், தீயணைப்பு மற்றும் தொழிற்சாலை துறை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் தணிக்கை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது.
அதோடு, இக்குழுவினர்களின் செயல்பாடுகளும், பொறுப்புகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. இக்குழுவினர் வருகிற 5ம் தேதி தொடங்கி, தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். எனவே, இதுபோன்ற ஆய்வின் மூலம் அனுமதியின்றி கள்ளத்தனமாக பட்டாசு தொழிலில் ஈடுபடுகிறவர்களை கண்டறி்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.