அரசு நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்துள்ளதால், முதல்வர் பதவியில் இருந்து ஜெகதீஷ்ஷெட்டர் உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
சிக்பளாப்பூரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர் கூட்டத்தை தொடக்கிவைத்து, அவர் பேசியதாவது: உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊழல் புரிந்து, சிறை சென்று திரும்பியுள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜகவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் கர்நாடக ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, தன் பங்குக்கு 4 பாஜக எம்.எல்.ஏ.க்களின் துணையுடன் பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அப்படியானால், கர்நாடகத்தில் பாஜக 3அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் மாநில அரசு நிர்வாகம் முழுமையாக சீர்குலைந்துள்ளது. பாஜகவின் அரசியல் சண்டையில் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை ஜெகதீஷ்ஷெட்டர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.