பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்தது: சாமியார்பேட்டை கடற்கரை பகுதியில் சிறுவர்பூங்கா, வணிகவளாகம், குடில்கள், குடிநீர், கழிப்பறை ஆதியவை அமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பரங்கிபேட்டையில் ரூ.1 கோடி செலவில் படகுகுழாம் புதுப்பிக்கப்படவுள்ளது. மேலும் ரூ.90.83 லட்சம் செலவில் பிச்சாவரத்தில் முழுக்குத்துறை மற்றும் எம்ஜிஆர் திட்டு பகுதியில் படகு குழாம் அமைக்கவும், பிச்சாவரத்தில் ரூ.28.23 லட்சம் செலவில் சிறுவர்பூங்கா, நீருற்று பூங்கா, பார்க்கிங் வசதி அமைக்கவும், ரூ.20 லட்சம் செலவில் மீன்அருங்காட்சியகம் அமைக்கவும், வீராணம்ஏரி தெற்கு நீர் திறக்கும் பகுதியில் ரூ.89 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கவும் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் மேற்கொள்வது குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். விரைவில் இப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்தார்.