/

பயிர் காப்பீடு கட்டணத்தை அரசே செலுத்த தமிழக உழவர் முன்னணி வலியுறுத்தல்

தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயற்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் மாவட்ட

News image
Updated On :23 ஜூலை 2013, 9:54 am

G.Sundararaj

விவசாயிகளின் பயிர் காப்பீடு கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயற்குழுக்கூட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் மாவட்ட துணைச்செயலாளர் ரா.சரவணன், கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபாலன், குமராட்சி ஒன்றியச் செயலாளர் தங்க.கென்னடி, செயற்குழு உறுப்பினர்கள் கோ.வெங்கடாசலம், வெ.பொன்னுசாமி, பொன்னந்திட்டு அ.மதிவாணன், மேலமூங்கிலடி சி.ராஜேந்திரன், பன்னப்பட்டு மு.சம்பந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வறட்சியை காரணம் காட்டி கடந்த ஆண்டு கர்நாடக அரசு தமிழகத்திற்குரிய நீரை கொடுக்க மறுத்தது. இந்த ஆண்டு அணைகளில் நீர் இருந்தும் இறுதி தீர்ப்பின்படி ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிடவில்லை. கர்நாடகஅரசின் இச்செயலை முறியடிக்கும் வகையில் தமிழகஅரசு இறுதி தீர்ப்பின்படி வாரந்தோறும் தர வேண்டிய நீரை முறையான அறிவிப்பு கொடுத்து திறந்துவிடும்படி வலியுறுத்தி வேண்டும், மாதந்தோறும் பெற வேண்டிய நீர் அம்மாதத்திலேயே பெறப்பட வேண்டும். அதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்க தமிழகஅரசு அனைத்து கட்சிகள், உழவர் அமைப்புகள் கூட்டத்தை கூட்டி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோருவது;

வீராணம்ஏரியில் ஏற்கனவே படகு விடும் திட்டம் விவசாயிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. தற்போது சிறுவர் பூங்கா அமைக்கும் திட்டத்தால் ஏரி நீர் மாசுபடும் ஆபத்துள்ளதால் அத்திட்டத்தை தமிழகஅரசு கைவிட வேண்டும்;  வரும் ஆண்டுகளில் விவசாயிகளின் பயிர் காப்பீடு கட்டணத்தை தமிழகஅரசே செலுத்த வேண்டும்; சென்ற ஆண்டு விவசாயிகள் பெற்ற கடனுக்காக செலுத்திய பயிர் காப்பீடு கட்டணத்தை (அரசு காப்பீடு கட்டணத்தை ஏற்றுக் கொண்டதால்) திருப்பித் தர வேண்டும்; கூட்டுறவு பயிர் கடன்களின் உச்சவரம்பை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.