நாளை சதுப்பு நிலக்காடுகள் தினம்!
நாளை (வெள்ளிக்கிழமை) இன்று சதுப்பு நிலக்காடுகள் தினமாகும். இந்நாளில் நாம் வளர்க்கும் சதுப்பு நில மரங்கள் எதிர்காலத்தில் நம் உயிர்காக்கும் கரங்கள் என்று உணர்ந்து கடலோர பகுதிகளில் கண்டல் மரங்களை


நாளை (வெள்ளிக்கிழமை) இன்று சதுப்பு நிலக்காடுகள் தினமாகும். இந்நாளில் நாம் வளர்க்கும் சதுப்பு நில மரங்கள் எதிர்காலத்தில் நம் உயிர்காக்கும் கரங்கள் என்று உணர்ந்து கடலோர பகுதிகளில் கண்டல் மரங்களை வளர்த்து எதிர்கால சந்ததியினருக்கு வளமான பூமியை பரசளிப்போம் என்கிறார் பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் முனைவர் டி.ராமநாதன்.
சுனாமி பேரழிவின் போது பெரும்பாலான உயிர் சேதத்தை தடுத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்த பெருமையோடு கடல்நீரின் மேல் கூட்டமாய் கரம் கோர்த்து நிற்கும், இயற்கை அளித்த பாதுகாப்பு அரணாய் போற்றப்படும் சதுப்பு நிலக்காடுகளின் சிறப்புகளை நாம் நினைவு கூற வேண்டிய நாள் இது. அலையாத்தி காடுகள் என்றழைக்கப்படும் இவை கடலும், ஆறும் கலக்கும் உவர்நீர் நிலைகளில் வளரும் தன்மை கொண்டவை.
கடல் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாதலால் அலையாத்திக் காடுகள் என்ற காரணப் பெயரோடு விளங்குகின்றன. உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக்காடுகளாகும். இவை தவிர இந்தியாவில் குஜராத், அந்தமான், நிக்கோபார், ஆந்திரா, ஒரிசா, மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் இக்காடுகள் பரவியுள்ளன. தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகே வங்கக்கடலை ஒட்டிய பகுதியான பிச்சாவரத்தில் 2800 ஏக்கரில் அலையாத்தி காடுகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் முத்துப்பேட்டை, கோடியக்கரை, பள்ளிக்கரணை, பழவேற்காடு பகுதிகளிலும் இக்காடுகளை காணலாம்.
கழுதை முன்னி, நரிக்கண்டல், வெண்கண்டல், பன்னுக்குத்தி, கருங்கண்டல், சிறுகண்டல், தில்லை, திப்பரந்தை, நெட்டை சுரபுண்ணை, குட்டை சுரபுண்ணை, மலட்டு சுரபுண்ணை, சோமுந்திரி உள்ளிட்ட மரங்கள் இக்காடுகளில் அதிகமாக உள்ளன. இவை செப்டம்பர் முதல் நவம்பர் வரை பூக்கும் தன்மை கொண்டவை. இம்மரங்கள் மருத்துவப் பயன்கள் உலகிற்கு இன்னுமோர் அதிசயமாக திகழ்கிறது. எய்ட்ஸ், தொழுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்ட வேதிப்பொருள்களை (Secondary Metabolites) உள்ளடக்கியவை இவை. கண்டல் மரங்களின் உலை, நுனி, காம்புகள் முதல் வேர் வரை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தின் இயக்குநர் முனைவர் பேராசிரியர் க.கதிரேசன் சதுப்பு நிலக்காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இக்காடுகளை வளர்க்க பல்வேறு உத்திகளை இம்மையம் கண்டறிந்துள்ளது. நிகழ்காலத்தில் நாம் வளர்க்கும் சதுப்புநில மரங்கள் எதிர்காலத்தில் நம் உயிர்காக்கும் கரங்கள் என உணர்ந்து கடலோர பகுதிகளில் கண்டல் மரங்களை வளர்த்து வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை பரிசளிப்போம் என்கிறார் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய மூத்த உதவிப் பேராசிரியர் முனைவர் டி.ராமநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...