கூட்டுறவு வங்கி, ரேசன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்

திருச்சுழி அருகே கூட்டுறவு வங்கி அலுவலர்களை தாக்கிய விவசாயிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டுறவு விவசாய வங்கி மற்றும் ரேசன்
Updated on
1 min read

திருச்சுழி அருகே கூட்டுறவு வங்கி அலுவலர்களை தாக்கிய விவசாயிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூட்டுறவு விவசாய வங்கி மற்றும் ரேசன் கடைகளையும் இன்று அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள அருணாச்சலபுரம் கூட்டுறவு வங்கியில் கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் அலுவலர்கள் வறட்சி நிவாரணம் வழங்கும் பணயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சலுக்குவார்பட்டியைச் சேர்ந்த விவசாயி கருப்பசாமி(45)வறட்சி நிவாரணம் பெறுவதற்கு ஆவணங்களுடன் வந்துள்ளார். அதை வங்கியின் காசாளார் செல்லம் சரிபார்த்து பெயர் பட்டியலிலும் பெயர் இருந்த நிலையில் மற்றொரு பட்டா எண்ணுக்கு வந்துள்ளதாகவும், தற்போது வைத்துள்ள ஆவணத்திற்கு வரவில்லை என்று விளக்கம் கூறி அனுப்பியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர் மறுபடியும் கருப்பசாமி அவரது சகோதரர் குமாரவேல் மற்றும் அவரது மகன் கணேசன் ஆகியோர் வங்கியின் முன்பு  குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். அதை தட்டிக் கேட்க வந்த மாற்றுத்திறனாளி விற்பனையாளர் பழனிவேல்ராஜனை சரமரியாக தாக்கியதில் காயம் அடைந்தார். அப்போது மற்ற பணியாளர்களான செயலாளர் போஸ், காசாளார் செல்லம் ஆகியோர் தடுக்க வந்த போது கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், குமாரவேல் கொடுத்த புகாரில் காசாளார், செயலாளர் ஆகியோர் கத்தியால் தாக்கியதால் காயம் அடைந்துள்ளதாகவும் பொய்யான புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சுழி வட்டாரப் பகுதியில் உள்ள 38 கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மற்றும் 13 கூட்டுறவு விவசாயி வங்கிகளையும் அடைத்து எம்.ரெட்டியபட்டி விவசாய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் செல்லம் தலைமையில் பணியாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அருப்புக்கோட்டை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சதாசிவம் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலர்கள் தரப்பிலிருந்து  மாற்றுத்திறனாளி விற்பனையாளரை தாக்கியவர்கள், அலுவலர்களை தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்த விவசாயிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு்க்க வேண்டும். அதேபோல், அலுவலர்கள் மீது விவசாயி கொடுத்துள்ள பொய்யான வழக்கை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, அலுவலர்கள் மீது குமாரவேல் கொடுத்த வழக்கை காவல் துறையினர் திரும்ப பெறுவதாக உறுதியளித்ததன் பேரில் 3 மணிக்கு மேல் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

இதனால், திருச்சுழி வட்டார பகுதிகளில் விவசாய வங்கிகளில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் பணியும், ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்யும் பணியும் கடுமையாக பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com