விருதுநகர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைகளை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தவர்கள் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காமராஜர்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் என்பவரின் மனைவி மரகதம்(73). இவருக்கு திருத்தங்கல் பகுதியில் 5 குடியிருப்பு மனைகளை குண்டூரை சேர்ந்த சேதுராஜன் என்பவரிடம் ரூ.15 லட்சத்திற்கு கிரையத்திற்கு வாங்கியுள்ளார். இதையடுத்து, சாமுவேல் என்பவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து மனைவி மரகதம் பிழைப்புத் தேடி மலேசியாவிற்கு சென்றார். சில ஆண்டுகளுக்கு பின் தற்போது சொந்த ஊர் சிவகாசிக்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து, தனது கணவர் வாங்கிய வீட்டு மனைகளை பார்க்கச் சென்றார். அப்போது, குறிப்பிட்ட வீட்டு மனைகள் வேறு சிலர் கட்டுப்பாட்டில் இருந்தது குறித்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்ததில் குண்டூர் சேதுராஜன் மறுபடியும் போலி ஆவணங்களை தயாரித்து இப்பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன், அண்ணாமலை, மலைச்சாமி, புஷ்பம், கணேசன் மற்றும் அகிலா ஆகியோருக்கு வீட்டு மனைகளை மறு கிரையம் செய்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
அதோடு, தான்(மரகதம்) குண்டூர் சேதுராஜனுக்கு பவர்பத்திரம் எழுதி கொடுத்திருப்பதாக கூறி போலி ஆவணம் தயாரித்தும் நிலங்களை விநியோகம் செய்துள்ளது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாரிடம் மரகதம் புகார் செய்தார். அதன் பேரில் குண்டூர் சேதுராஜன், அண்ணாமலை, மலைச்சாமி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.