இவ்வாறு தெய்வீக உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக இசையும், பாடலும், ஆடலும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு ஆலயங்களிலே படைக்கப் பெற்றது. அதன் வழி மக்களை அடைந்த ஆடல்கலை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு அரசியல், சமூக மாற்றங்களினால், சட்ட நெருக்கடிகளால் ஆலயங்களை விட்டு வெளியேறி பெருநகரங்களிலே அரங்குகளிலே (From Temples to Theaters) ஆடப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு பக்கம் ஆடல்கலை பயிலுவதற்கு முற்காலத்தில் இருந்த கட்டுப்பாடு எல்லைகளை கடந்து பலரும் அதனை பயில முன் வந்தனர். ஆனால் மறுபக்கத்தில் தெய்வீக அர்ப்பணிப்பு உணர்வுகளை மெல்லக் குறைந்து, இந்த கலை மற்றவர்களை மகிழ்விக்கவும், புகழ்பெறவும் கையாளப்படும் நிலை ஏற்பட்டது.இந்த மாற்றத்தை நெறிபடுத்த வேண்டும் என்ற உணர்வோடு அறிஞர்களான டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கினர். ஆடல் கலைஞர்கள் இனம், மொழி, சமயம் கடந்து தங்கள் நாட்டியத்தை இறை உணர்வோடு அஞ்சலியாக செலுத்தும் நாட்டியாஞ்சலியாக மலர்ந்தது. இன்றைக்கு பாரத நாட்டின் அனைத்து வகை ஆடல் கலைஞர்களும், பரதநாட்டியம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், ஓடிஸி, சத்ரியா, மணிப்புரி. கத்தகளி, யட்சகானம், ச்சாவ் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடல்வல்லான் திருவடியில் அஞ்சலி செலுத்தும் மாபெறும் பண்பாட்டு கலை விழாவாக உருவெடுத்துள்ளது. உயரிய நோக்கங்களின் தூய்மை. நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் நெறி தவறாத உறுதி. ஆடல் கலைஞர்களின் முழு ஒத்துழைப்பு, அன்பு உள்ளங்களின் பொருளுதவி, மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு, ரசிகப் பெருமக்களின் திருவளால் கலைக்கோயிலாய் நாட்டியாஞ்சலி திகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம்.