குள்ளஞ்சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த கிருஷ்ணங்குப்பத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் மணி என்ற ஆனந்தராயர்(37), கப்ரியேல் மகன் பவுல்ராஜ்(46) மற்றும் மரியதாஸ்(32) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு ஆலப்பாக்கம் காட்டுக்கூடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர் திசையிலிருந்து அதே ஊரைச்சேர்ந்த ஆனந்தகுமார்(35) மற்றும் சண்முகம்(34) ஆகிய இருவரும் மற்றொரு பைக்கில் வந்தபோது எதிர்பாரத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஆலப்பாக்கம் காட்டுக்கூடலூர் சாலை சந்திப்பில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மணி என்ற ஆனந்தராயர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வழியிலேயே பவுல்ராஜ் இறந்தார்.
படுகாயமுற்ற மரியதாஸ், ஆனந்தகுமார் மற்றும் சண்முகம் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துத் தொடர்பாக குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர் ஜவகர்லால் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்துகிறார்.