காஞ்சிபுரம் அருகே அரிசி ஆலையில் இருந்து புதுவைக்கு அம்மாநில முதல்வர் ரங்கசாமி படம் போட்டு கடத்த இருந்த 400 மூடை இலவச அரிசியை தனிப்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்ஒட்டிவாக்கத்திóல பாபு என்பவரின் அரிசி ஆலை ஒன்று உள்ளது. அந்த ஆலையில் இருந்து புதன்கிழமை லாரி ஒன்றில் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு வந்தது. அப்போது அந்த வழியாக உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும்படை அதிகாரி கலைமணி குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின்பேரில், அந்த அரிசி ஆலையில் இருந்து லாரியில் ஏற்றப்பட்ட அரிசி மூடைகளை அவர் பார்வையிட்டார். அப்போது அந்த மூடைகளில் புதுவை முதல்வர் ரங்கசாமி படம் அச்சிடப்பட்டு, 50 கிலோ இலவச வெள்ளை அரிசி, புதுவை அரசு என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அவர், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பவநந்தினிக்கும், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமாருக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அரிசியை பார்வையிட்டனர். அரிசியை சோதனை செய்து பார்த்த போது, அது தமிழக அரசின் விலையில்லா அரிசி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இலவச பொருட்கள் ஏதும் மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது என்ற அடிப்படையில், அந்த அரிசி மூடைகளை கைப்பற்றினர். இதில் 50 கிலோ எடையுள்ள 261 மூடை அரிசியும், மீதி 140 மூடை அளவுள்ள அரிசி, மூடை போட தயார் நிலையிலும் இருந்தது. அவற்றை கைப்பற்றிய பறக்கும் படை அதிகாரி கலைமணி கைப்பற்றி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரிடம் ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.