மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் செ. ஹைதர் அலி. ஜெயலலிதா, ஸ்டாலின் போன்ற முக்கியத் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் போது, தொடர்புடைய வேட்பாளர்கள் கை வலியையும் பொருள்படுத்தாமல் மணிக் கணக்கில் கைக்கூப்பி நிற்கும் நிலையில், வேட்பாளர் ஹைதர் அலி வாக்காளர்களுக்கு மறந்தும் வணக்கம் வைப்பதில்லை.
வாக்காளர்களை நோக்கி சலாம் வைப்பது, பணிவைத் தெரிவிக்கும் வகையில் நெஞ்சில் கையை வைத்துக் கொள்வது, சோனியா காந்தி போல மக்கள் கூட்டத்தைப் பார்த்து கை அசைப்பது போன்ற செய்கைகளை மட்டுமே செய்து வருகிறார். இறைவனைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்ற இஸ்லாம் கோட்பாட்டின் மீது அவர் கொண்ட தீவிரப்பற்றே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்ட போது, கைக்கூப்பி வணங்கும் வழக்கம் எங்களுக்குக் கிடையாது. இதே பாணியில் வாக்கு சேகரித்துத் தான் ராமநாதபுரம், ஆம்பூர் தொகுதிகளில் வெற்றிப்பெற்றோம். எதற்காகவும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்றார்.