தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கப்போகும் அரசு எது என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்: ப.சிதம்பரம்

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என பேசி வரும் முதல்வர் ஜெயலலிதா அது எந்த அரசு என்பதை மக்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

News image
Updated On :24 மார்ச் 2014, 11:45 am

யுகன்

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என பேசி வரும் முதல்வர் ஜெயலலிதா அது எந்த அரசு என்பதை மக்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மானாமதுரை ஒன்றியத்தில் கல்குறிச்சி, கொன்னக்குளம், மேலப்பிடாவூர், ஆலம்பச்சேரி, விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-

130 ஆண்டுகள் 8 தலைமுறைகள் பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து மக்களுக்காக காங்கிரஸ் கட்சி உழைத்து வருகிறது. இக் கட்சியில் குறையும் நிறையும் உண்டு. குறை இல்லை என்று சொல்லவில்லை.காங்கிரஸ் கட்சியில் தவறு செய்த சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை கட்சி தண்டித்துள்ளது,ஒரு சில தனி நபர்கள் தவறு செய்தால் கட்சியே தவறு செய்வதாக யாரும் சொல்லக்கூடாது. நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாதபோதுதான் அக் கட்சியின் அருமை மக்களுக்குத் தெரியும்.

1980 களில் இரண்டரை ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது கருணாநிதி நேரு மகளே வருக நிலையான ஆட்சி தருக என அழைத்தார். மத்தியில் வாஜ்பாய் தலைமையில் 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி நடத்தியது. வாஜ்பாய் கண்ணியமானவர் ஆனால் அவரது அரசு கண்ணியமான அரசு அல்ல.அவரது ஆட்சி பரந்த மனப்பான்மையுடன் நடக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அரசியல் முகமாகம். அக் கட்சி இந்து மதவெறி, இந்தி மொழி வெறியை கைவிடவில்லை.மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் காங்கிரசுக்கு சவால் அல்ல, பாஜக தான் காங்கிரசின் போட்டி கட்சியாகும். தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள் ஒவ்வொன்றும் சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துவிட முடியாது.அது அந்த கட்சிகளின் தலைவர்களுக்கே தெரியும். 

தனது கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை கழட்டி விட்டுவிட்டு மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என பேசி தமிழக முதல்வர் ஜெயலலிதா  பிரச்சாரம் செய்கிறார். அவரது கட்சி அங்கம் வகிக்கப்போகும் அரசு எது என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும். சிவகங்கைத் தொகுதியில் மக்களுக்காக மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை யாரும் மறுக்க முடியாது. ஜெயலலிதா சாலையில் சென்றால் இத் திட்டங்கள் எல்லாம் அவருக்கு தெரியவரும். அவர் வானத்தில் சென்று வருவதால் இதெல்லாம் தெரிந்திருக்க முடியாது. இவர் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து எந்த மாவட்டத்துக்கும் வருவது கிடையாது. கடந்த 5 ஆண்டுகளில் எனக்கு வழங்கப்பட்ட தொகுதி வளர்ச்சி நிதி ரூ 19 கோடி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொகுதி வளர்ச்சி நிதியை முழுமையாக செலவிட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன், நான் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடன் இந்திய நாட்டின் பொருளாதா வளர்ச்சி 9 சதமாக உயர்ந்தது. இதனால்தான் 69 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்து தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு ஒரு ஆண்டுக்கு ரூ 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துதர முடிந்தது. இது எனக்கு பெருமை அல்ல.

கடந்த 10 ஆண்டுகளாக சிவகங்கை பகுதி தமிழனால் உங்களுக்கு கிடைத்த பெருமையாகும்.நாட்டின் மொத்த மக்கள் தொகையில்  83 ஆயிரம் கோடி பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். அதனால்தான் காங்கிரஸ் கட்சி இளைஞர்களும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்து அதிகமான இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழகத்தில் 15 இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்கள். எனவே மக்கள் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைய வாக்களிக்க வேண்டும் என்றார்.

வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஏற்கனவே எனது தந்தை மூலம் சிவகங்கைத் தொகுதியில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்துள்ளன. பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. நான் இத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி யானால் மத்திய அரசு திட்டங்கள் தவிர தனியார் துறை திட்டங்களையும் இத் தொகுதிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்வேன். மத்திய காங்கிரஸ் அரசு மாணவர்களுக்கு கல்விக்கடனை கொடுத்து படி என்கிறது. ஆனால் ஜெயலலிதா அரசு தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்து மக்களை குடி என்கிறது. படிக்கச்சொல்லும் அரசு அமைய வாக்காளர்கள் தேர்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என்றார்.

இப் பிரச்சாரத்தின்போது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி முருகேசன், கட்சியின் மாநில எஸ்.சி ஆலோசனைக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சி.சஞ்சய்காந்தி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகி எம்.முத்துக்குமார், மானாமதுரை இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.கணேசன், பி.பாஸ்கரன், வட்டாரத் தலைவர் போஸ்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.