பசுமை வீடுகள் கட்டித் தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம் என அண்மையில் கோரிக்கை மனு அளித்த அகிலாண்டபுரம் கிராம மக்கள், அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டுத் தங்கள் கிராமத்துக்கு வர வேண்டாம் என அறிவிப்புப் பலகை அமைத்துள்ளனர்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம், அகிலாண்டபுரம் பூதங்குடி கிராமத்தில் கடந்த 42 ஆண்டுகளாக 100 குடும்பத்தினர், ஆவராணி புதுச்சேரி ஶ்ரீ நடேஷ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருவதாகவும், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழும் இப்பகுதி மக்களுக்குப் பட்டாவுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 27-ம் தேதி நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அடிப்படை உரிமைகள் இல்லாமல் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கு ஆர்வம் காட்டாத அரசியல் வாதிகள், எங்கள் ஊருக்குள் வர வேண்டாம். எங்கள் வாக்கு உங்களுக்கு இல்லை. ஏன்? யாருக்குமேயில்லை.
தேர்தலைப் புறக்கணிப்போம் என அச்சிடப்பட்ட அறிவிப்புப் பலகை அகிலாண்டபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அகிலாண்டபுரத்தில் உள்ள வீடுகளில் தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தும் வகையில், கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன.