ஈரோடு கடையில் ரூ.8.10 லட்சம் ரொக்கம் திருட்டு: கட்டடத் தொழிலாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை
ஈரோட்டில் உள்ள ஒரு ஸ்டேஷனரி கடையில் ரூ.8.10 லட்சம் திருடு போன சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


ஈரோட்டில் உள்ள ஒரு ஸ்டேஷனரி கடையில் ரூ.8.10 லட்சம் திருடு போன சம்பவம் தொடர்பாக ஈரோடு நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அக்கடையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் கட்டடத் தொழிலாளர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு சடையம்பாளையம் சாலையில் உள்ள திருப்பதி கார்டன் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் பூபதிராஜா (41). ஈரோடு மரப்பாலம் சாலையில் இவருக்கு சொந்தமான பேப்பர், நோட்டு புத்தகங்கள் மற்றும் அலுவலக ஸ்டேஷனரி பொருள்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
மொத்தம் 4 அடுக்கு மாடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மொத்த ஸ்டேஷனரி அங்காடியின் கீழ்தளத்தில் நோட்டு புத்தகங்களும், முதல் தளத்தில் விற்பனைப்பிரிவும், 2, 3 மற்றும் 4-ம் தளத்தில் ஸ்டேஷனரி பொருள்கள் இருப்பு வைக்கும் குடோன்களும் உள்ளன.
தற்போது இக்கட்டடத்தில் 5-வது மாடியில் தண்ணீர் தொட்டி மற்றும் அறை கட்டும் பணியும், முன்புறம் முகப்பு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக கடையின் முன்புறத்தில் சாரம் கட்டப்பட்டு தினமும் சுமார் 40 கட்டட தொழிலாளர்கள் மூலம் பணி நடந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் நிறுவன உரிமையாளர் பூபதிராஜா கடையில் வியாபாரமான பணத்தை எண்ணி கல்லா பெட்டியில் ரூ.6 லட்சத்தையும், கைப்பையில் ரூ.2.10 லட்சம் என மொத்தம் ரூ.8.10 லட்சம் ரொக்கத்தை வைத்து பூட்டி விட்டு அதன் சாவியை காசாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து சென்று விட்டார்.
காசாளர் கிருஷ்ணமூர்த்தி கடையை பூட்டி சாவியுடன் வீட்டுக்குச் சென்று விட்டார். புதன்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் கடையை திறந்த பூபதிராஜா கல்லா பெட்டியுள்ள டேபிள் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சோதனையிட்ட போது அதில் இருந்த ரூ.8.10 லட்சம் ரொக்கமும் திருட்டு போனது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த பூபதிராஜா ஈரோடு நகர காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஈரோடு நகர இன்ஸ்பெக்டர் லட்சுமணன் பூபதிராஜா, காசாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அங்கிருந்த ஊழியர்கள், கட்டட தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில், தற்போது கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் ஏற்கனவே 4-வது மாடியில் உள்ள கதவை இருதினங்களுக்கு முன்பு முழுவதுமாக நீக்கி விட்டு தொடர்ந்து பணி நடந்து வருவது தெரியவந்தது. எனவே திருட்டில் ஈடுபட்ட நபர் கதவு இல்லாத விஷயத்தை அறிந்து கொண்டு எப்படியோ உள்ளே இறங்கி திருடு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்குச் கொண்டு வரப்பட்ட துப்பறியும் மோப்ப நாய் ராக்கி கடையின் உள்புறமாக ஓடிச் சென்று விட்டு வெளியே சென்று மரப்பாலம் சாலையில் சென்று ஸ்டேட் வங்கி சாலை வரை சென்று நின்றது. உள்புறம் கதவு நீக்கப்பட்ட விஷயத்தை அறிந்தவர்கள் தான் இந்த திருடு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கட்டட தொழிலாளர்கள் அல்லது அங்கு பணிபுரியும் ஊழியர்களில் யாரேனும் இந்த திருடு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என போலீஸார் கருதுவதால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஏடிஎஸ்பி. பாலாஜி சரவணன், டிஎஸ்பி (பொ) சூரியகலா உள்ளிட்ட உயரதிகாரிகளும் நேரில் விசாரணையில் ஈடுபட்டனர். இது குறித்து ஈரோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...