டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க தீவிர முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

News image
Updated On :3 மே 2015, 5:49 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக டிஜிட்டல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையை ஆசிரியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தப் பள்ளியில் முழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவியர் சுமார் 150 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு விடுமுறை நாட்களில் பெயிண்டிங், தையல், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும் கல்விச் சுற்றுலா, ஆண்டுவிழா மற்றும் ஒவ்வொரு தேசிய விழாக்கள் என அனைத்தும் ஆங்கில வழிப் பள்ளிக்கு இணையாக நடைபெற்று வருகிறது. இதில் மாணவ மாணவியர்கள் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்திக்காட்டுகிறார்கள். மாவட்டத்தின் பல்வேறு துறை உயரதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டு மாணவர்களின் திறமைகளையும், இவர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையும் பாராட்டிச் செல்கிறார்கள்.

இவர்கள் 2015-16-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் 21-ம் தேதியே தொடங்கி விட்டார்கள். இக் கிராமத்திற்கு அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பள்ளி வேன்கள், பேருந்துகள் வந்து இப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை இழுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், இங்கிருந்து யாரும் வேறு பள்ளிகளுக்குச் செல்வதில்லை.

மேலும் பள்ளியின் வளர்ச்சி குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு இக்கிராமத்தில் வீடுகள் தோறும் கொடுத்து, இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

தற்போது மெட்ரிக்குலேசன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நிர்வாகம் ஊர் முழுவதும் பிளக்ஸ் போர்ட்டுகள் வைத்துள்ள நிலையில், இந்த அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி பிளக்ஸ் போர்டுகள் ஊரெங்கும் வைக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பார்த்து, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியை பாராட்டிச் செல்கிறார்கள்.

இது குறித்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் கூறுகையில்: இப் பள்ளியின் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன், தங்களது சொந்தப் பணத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கும், பல்வேறு உதவிகளைச் செய்வதற்கும், பாடங்களிள் புதிய யுக்திகளைக் கையாண்டு சொல்லித் தருவதிலும் தங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.