தற்கொலைக்கு முயலும் அரசு ஊழியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான ஆ.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து காமராஜ், வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: அரசுப் பணியாளர்களுக்கென்று, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. தனக்கு மேல் பணிபுரியும் அலுவலர்கள், கீழ் உள்ள அலுவலர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டினாலோ, நடவடிக்கை எடுத்தாலோ, அவர்களை மிரட்டும் வகையில் தற்கொலை முயற்சியில் சில அரசு ஊழியர்கள் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால் எந்த அரசு அலுவலகத்திலும் எந்தப் பணியும் நடைபெறாது. உயரதிகாரிகள் கீழ் பணிபுரியும் அலுவலர்களை வேலை வாங்கவே முடியாது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே. அரசு நிர்வாகம் முடங்கும்.
அரசு நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் சில எதிர்கட்சிகள் திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை ஊக்குவித்து வருகிறது.
தற்கொலை முயற்சி செய்யும் ஊழியர்களின் விவரங்களை நுண்ணறிவு பிரிவு போலீஸார், உளவுப் பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மையான நிலவரம் தெரியும்.
அரசையும், அரசு அதிகாரிகளையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு மிரட்டும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் வழக்கு பதிவு செய்யப்படாமல் உள்ளது, இந்த அரசுக்கு எதிரான செயல்களை ஊக்குவிப்பதாக அமையும்.
அரசு நிர்வாகம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுதவற்கும், அரசு உயரதிகாரிகள் தங்கள் கடமைகளை செவ்வனே செய்வதற்கும் இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசிய அவசரமாக உள்ளது.
இதற்கு அரசு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்து, தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடமால் இருக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.