அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில், அதிமுகவினர் அருள்மிகு பெரியமாரியம்மன் கோவிலில் 108 சிதறு தேங்காய் உடைத்து திங்கள்கிழமை நேர்த்திகடன் வழிபாடு செய்தனர்.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிரித்து அவர் செய்திருந்த மேல் முறையீட்டை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நான்குபேரையும் விடுதலை செய்தது.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி ஆகியோர் தலைமையில் அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் முன்பு திரண்டனர்.
அங்கு அம்மனுக்கு, ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றிக்கு நன்றி சொல்லி சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அம்மனுக்கு 108 சிதறு தேங்காய் உடைத்து வழிப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மகளிர் அணியின் சக்திகோதண்டம், ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து, தொகுதிச் செயலாளரும், கூட்டுறவு நகர வங்கித் தலைவருமான எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர்மன்ற உறுப்பினர்கள் டி.வி.கந்தசாமி, மீராதனலட்சுமி, 33-வது வார்டு கிளைச் செயலாளர் க.வீராச்சாமி உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றிக் குழுத் தலைவி கனகுஅம்மாள் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள வழிவிடு முருகன் கோவிலில், ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையானதையொட்டி, ஜெயலலிதா பெயரில் சங்கல்பம் செய்து, சிறப்பு அர்ச்சனை நடத்தினர். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்