சாத்தான்குளம் அருகே சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி இளைஞரை முன்விரோதத்தில் குத்திக்கொலை செய்த டீக் கடை உரிமையாளர் உள்ளிட்ட 3பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கோயில்ராஜ் மகன் பிரவீன்(20) . இவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை தேடி கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்டு நடந்து வந்துகொண்டிருந்த பிரவீனை மறித்து 3 பேர் கத்தியால் குத்தி விட்டு ஒடிவிட்டனர்.
பலத்த காயமடைந்த பிரவின் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அதில் கடந்த 2ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தலில் அதே ஊரைச் சேர்ந்த அற்புதராஜ், புஷ்பராஜ் ஆகியோர் போட்டியிட்டனராம். அதில் அற்புதராஜ் வெற்றி பெற்றாராம். இதில் அற்புதராஜிக்கு ஆதரவாக பிரவீனும் , புஷ்பராஜிக்கு ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் டீக்கடை உரிமையாளர் ஜார்ஜ் என்பவரும் செயல்பட்டனராம். இதில் ஏற்பட்ட பிரச்சனையில் பிரவீனுக்கும் ஜார்ஜக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அங்கு நடந்த ஆலய விழாவிலும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜார்ஜ், அதே ஊரைச் சேர்ந்த செல்லையா மகன் ராஜரத்தினம் (எ) ராயல் , ரெத்தினம் மகன் அல்பர்ட் ஆகியோர் சேர்ந்து பிரவீனை குத்திக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.