/

தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

தலைக்கவசத்தின் அவசியம் குறித்து காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Updated On :10 அக்டோபர் 2015, 3:06 pm IST

தலைக்கவசத்தின் அவசியம் குறித்து காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமலுக்கு வந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் இன்றும் பலர் தலைக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சனிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. ஏ.எஸ்.பி. ஸ்ரீநாத் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரசாரத்தை தொடக்கி வைத்தார்.

இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். பெண்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தலைக்கவசத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். தலைக்கவசம் அணியும் போது, நிச்சயம் தாடை பெல்ட் அணிவது அவசியம். தாடை பெல்ட் அணியாவிட்டால், விபத்தின் போது, தலைக்கவசம் அணிந்தும் பயனில்லாமல் போய்விடும். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன், ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும். புதிய ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட தலைக்கவசம் வாங்கி அதற்கான ரசீதை காட்டினால்தான் வாகனம் விடுவிக்கப்படும் என்று வலியுறுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இரட்டை மண்டபம் தொடங்கி, மூங்கில்மண்டபம், ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.