புதுக்கோட்டை,
அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் அமைப்பை நிறுவுவதென தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அனைத்து கட்டடப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் டி. ராகவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சங்கத்திலுள்ள அனைத்து பொறியாளர்களையும் காப்பீடுத்திட்டத்தில் சேர்ப்பது. போலியான பொறியாளர்களைக்கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் சங்கங்கள் சார்பில் தமிழகம் முழுதும் மரக்கன்றுகளை நடுவது.
உறுப்பினர்கள் அனைவருக்கும் யோகாசனப் பயிற்சி அளிப்பது, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் அமைப்பை நிறுவுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநிலத்தலைவர்(தேர்வு) தில்லைராஜன், திருப்பூர்மாநிலச்செயலர் கே. சுரேஷ்குமார், மாநிலப்பொருளர் எம். ரவி, முன்னாள் மாநிலத்தலைவர்கள் மோகன்ராஜ், சிவலிங்கம், தாயுமானவன், மாநில செயல்பாட்டுக்குழுத்தலைவர் கே. நல்லதம்பி, முன்னாள் மாவட்டத்தலைவர்கள் கனகராஜன், ராமசாமி, நல்லதம்பி, பஷீர்முகமது, ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
மாவட்டச்செயலர் ஏ. ராஜதுரை வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.எஸ். காந்தி நன்றி கூறினார். இதில், மாநில அளவில் இயங்கி வரும் 75 சங்கங்களைச் சேர்ந்த உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கருணாநிதி, எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.