பாராமுல்லா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள போமை என்ற இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து சரமாரியாக தாக்கினர். சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு தீவிரவாதி குண்டடி பட்டு காயங்களுடன் சிக்கியதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
பின்னர், அப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப், ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் மற்றும் மாநில போலீஸார் இணைந்து விடிய, விடிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.