ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரியல் எஸ்டேட் லாபத்திற்காக சென்னை பெருநகர எல்லையை விரிவாக்கத் துடிப்பதா: ராமதாஸ் கேள்வி

சென்னை பெருநகர எல்லையை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பான்மை பகுதிக்கு நீட்டித்து, 8 மடங்காக விரிவுபடுத்த

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:10 pm

DIN

சென்னை: சென்னை பெருநகர எல்லையை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பான்மை பகுதிக்கு நீட்டித்து, 8 மடங்காக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிடுள்ளது. இது போகாத ஊருக்கு வழிகாட்டுவதாகவே அமையும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - 

சென்னை பெருநகரத்தின் எல்லை இப்போதைய நிலையில் 1189 சதுர கி.மீ அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. இதை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லை வரை நீடித்து 8.878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக மாற்றுவது தான் ஆட்சியாளர்கள் திட்டமாகும். இத்திட்டத்தின்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 1,709 கிராமங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் கொண்டு வரப்படும். இதனால் சென்னை பெருநகரம் என்பது தில்லி & தேசியத் தலைநகரப் பகுதிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெருநகரமாக உருவெடுக்கும். மேலோட்டமாகப் பார்க்கும் போது சென்னை பெருநகரப் பகுதி விரிவுபடுத்தப்பட்டால், பெருநகர எல்லைக்குள் புதிதாக சேர்க்கப்படும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்; அது மக்களுக்கு நன்மையாக அமையுமே? என்ற பொதுவான எண்ணம் எழலாம். ஆனால், நடைமுறையில் நகரமயமாக்கலின் எந்த நன்மையும், புதிதாக சேர்க்கப்படும்  பகுதிகளுக்கு கிடைக்காது என்பது ஒருபுறமிருக்க, அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், பல்லுயிர் வாழிடங்கள் உள்ளிட்ட இயற்கையின் கொடைகள் அழிக்கப்பட்டு விடும் என்பது தான் உண்மை.

கடந்த கால அனுபவங்கள் தான் இதற்கு ஆதாரம் ஆகும். 1975-ஆம் ஆண்டு வரை சென்னை பெருநகரப் பகுதியின் பரப்பளவு வெறும் 174 சதுர கிலோ மீட்டர் மட்டுமே. 1975-ஆம் ஆண்டில் தான்  பெருநகரப் பரப்பு 1189 கிலோ மீட்டராக நீட்டிக்கப்பட்டது. இதில் 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள  சென்னை மாநகராட்சிப் பகுதி தவிர மீதமுள்ள 8 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 179 ஊராட்சிகளில்  இன்னும் பாதாள சாக்கடைகள் கூட அமைக்கப்படவில்லை. சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரம் நகராட்சியில் கூட குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முழுமையடையவில்லை. சென்னை பெருநகரப் பகுதி விரிவாக்கப்பட்டு 43 ஆண்டுகளாகியும் இது தான் நிலைமை என்றால், இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்படும் பகுதிகளில் நாளையோ, நாளை மறுநாளோ அனைத்துக் உட்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்பட்டு விடும் என்று நம்புவது அறியாமை மற்றும் ஏமாளித்தனத்தின் உச்சமாகும்.  சென்னைப் பெருநகரப் பகுதிகளில் கடந்த 43 ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது  ஏன்? என்பதை விளக்கி விட்டு தான், புதிய விரிவாக்கம் குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றான சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றவாறு சென்னையின் பரப்பளவையும், கட்டமைப்பையும் அதிகரிக்க வேண்டாமா? என்ற ஐயம் ஏற்படலாம். ஆனால், அதற்கு எந்தத் தேவையும் இல்லை. மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை மாநகரின் மக்கள் தொகை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெருநகரப் பகுதியின் இப்போதைய மக்கள் தொகை 77 லட்சமாகும். இது அடுத்த சில பத்தாண்டுகளில் 25% அளவுக்கு அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும் அவர்கள் அனைத்து வசதிகளுடன் வாழ்வதற்கு இப்போதுள்ள 1189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு போதுமானதாகும். இதை இன்னும் விரிவுபடுத்தி தேவையில்லாத சிக்கல்களை அரசு விலை கொடுத்து வாங்கிவிடக்கூடாது.

சென்னை பெருநகரப்பகுதி விரிவுபடுத்தப்படவுள்ள பகுதிகளில் பசுமையான வயல்வெளிகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கவும், 4200 நீர்நிலைகளை பராமரிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. இத்தகைய சூழலில் சென்னைப் பெருநகரப் பகுதி விரிவாக்கப்பட்டால் வயல்வெளிகளும், நீர்நிலைகளும் வீட்டுமனைகளாக்கப்படலாம். அத்தகைய தாழ்வான பகுதிகள் குடியிருப்புகளாக்கப்பட்டால், 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்டது போன்ற வெள்ளம் உருவானால் அதன் பாதிப்புகளை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. அதுமட்டுமின்றி விளைநிலங்கள் மனைகளாக்கப்பட்டால் உணவு உற்பத்திக் குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்னை பெருநகர எல்லை விரிவாக்கப்படுவதால் அங்குள்ள மக்களின் உரிமைகளும், வாழ்வாதாரங்களும் பறிக்கப்படலாம். இந்த அநீதிக்கு எதிராக  விரிவாக்கப்படவுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தீவிரமாக போராட வேண்டும்.

சென்னை பெருநகரப்பகுதி விரிவாக்கப்படுவதால் இத்தனை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், அவற்றைப் பொருட்படுத்தாமல், பெருநகர விரிவாக்கத்தில் ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுவதன் பின்னணியில் வேறு சில காரணங்களும் உள்ளன. தமிழக ஆட்சியாளர்கள் கையூட்டு மூலம் சேர்த்த பணத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை ஒட்டுமொத்தமாக வாங்கிக் குவித்துள்ளனர்.

சென்னைப் பெருநகரப் பகுதிகள் விரிவுபடுத்தப்பட்டால் அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களின் மதிப்பு உயரும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே அப்பகுதியில் நில வணிகம் செய்வோருக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவர்களிடமிருந்து பெருந்தொகை கையூட்டாக பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலுதவியாகத் தான் சென்னைப் பெருநகர எல்லையை விரிவுபடுத்த பெருநகர வளர்ச்சிக் குழுமம் துடிக்கிறது. ஆட்சியாளர்களின் சுயநலனுக்காகவும், சுயலாபத்துக்காகவும் சென்னை பெருநகரத்தின் எல்லைகள் மாற்றி சீரழிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, சென்னை பெருநகர எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். இப்போதுள்ள பெருநகர எல்லைக்குள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி அங்குள்ள மக்களுக்கு நகரமயமாக்கலின் நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.