சென்னை: மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது என்று தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள ஒரே ஒரு அதிமுக வேட்பாளரும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ரவீந்திரநாத் குமார் 4,99,354 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, 76, 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி அறிவிப்புக்கு பின்னர், ரவீந்திரநாத் குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேனி மக்களவைத் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க பாடுபடுவேன் என்றார்.
மேலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் எனற கனவு எனக்கு இல்லை என்றும், அதிமுகவை வழிநடத்தும் முதல்வர், துணைமுதல்வர் என்ன சொல்கிறார்களோ அதனபடி செயல்படுவேன் என்று கூறினார்.
இதனிடையே, வெற்றி பெற்றுள்ள துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி தருவது குறித்து பிரதமர் நரேந்திரமோடி முடிவு எடுப்பார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மோடி தமிழகத்திற்கு அங்கீகாரம் கொடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து, அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.