சர்வதேச அளவில் அடுத்த 5 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது அமைச்சரவை என்று பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளப் படி, இந்தியாவை பொருளாதாரரீதியாக முழுவீச்சில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனிடம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 17-வது மக்களவையின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) வியாழக்கிழமை பதவியேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவியேற்றார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முதலில் பிரதமர் மோடி பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கெளடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டகேபினட் அமைச்சர்களும், அடுத்து தனிப் பொறுப்பிடன் கூடிய இணையமைச்சர்களும் அதனைத் தொடர்ந்து இணையமைச்சர்கள் என 57 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்களில் ஒருவரும், மோடியின் மனசாட்சியாகவும், அவரின் எண்ணத்தை அப்படியே செயல்படுத்தும் திறமைமிக்கவராக துணிச்சலான மற்றும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒருவராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அடுத்து நிதியமைச்சராக பொறுப்பேற்கும் 2-வது பெண்மணி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன், இந்தியாவை பொருளாதாரரீதியாக முழுவீச்சில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தனது கவனத்தை செலுத்துவார் என்றும் பாதுகாப்புத்துறையில் தடம் பதித்ததுபோன்று நிதித்துறையிலும் சாதிப்பார் என்பது நிச்சயம்.