திருப்பூர் மாநகரில் சனிக்கிழமை காலை 6 மணி முதலே பொருள்களை வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இதில் பெரும்பாலான பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருந்தது காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், மளிகைக் கடைகள், பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி மார்க்கெட், எல்.ஆர்.ஜி.மகளிர் கல்லூரி, நஞ்சப்பா பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் ஆகிய அனைத்து இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. அதே போல், ராயபுரம், டவுன்ஹால், கருவம்பாளையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தள்ளுவண்டிகளில் காய்கள், பழங்கள் வாங்கவும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.