நாமக்கல்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் மாதத்தின் முழு பொது முடக்கத்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்த உத்தரவிட்ட தமிழக அரசு, நோய்த் தொற்று பரவல் குறையாததால் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை இந்த பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதத்தை போன்று ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது. இதன் காரணமாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், மோகனூர், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக கடைகள் திறக்கப்படவில்லை. பெட்ரோல், டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் இயங்கவில்லை. மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பேருந்து, ரயில், ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் இயங்கவில்லை. நாமக்கல்லின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்ததை காணமுடிந்தது. அவர்களை தடுத்து நிறுத்தி காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் திறக்கப்படாத நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல இயங்கின. திங்கள்கிழமை அதிகாலை 6 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.