ஹைதராபாத்: ஹைதராபாத் மாநகராட்சிக்காக நடைபெற்ற தேர்தலில் 42 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
150 வார்டுகளை உள்ளடக்கிய ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,222. இந்த தேர்தலுக்காக தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் 48,000 ஊழியர்களையும், 52,000 காவல்துறையும் நியமித்து விரிவான தேர்தல் ஏற்பாடுகளை செய்தது.
கரோனா தொற்று தடுப்பைக் கருத்தில் கொண்டு, இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில் மொத்தமாக 42 சதவிகித மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
தேர்தல் அறிவித்த 150 வார்டுகளில் 149 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பழைய மலக்பேட்டை வார்டில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்திற்கு பதிலாக மார்க்சிஸ்ட் கட்சியின் சின்னம் இடம்பெற்றதால் அந்த வார்டுக்கான தேர்தல் மட்டும் டிசம்பர் 3ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும்.
மேலும் டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.