மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களின் நகலை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கிழித்தார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தில்லியில் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக 22-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற தில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சட்டத்தின் நகலை கிழிந்தார்.
பின், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், போராடும் விவசாயிகளுக்கு முழு ஆதரவைத் தருவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில்,
ஒவ்வொரு விவசாயும் பகத் சிங்காக மாறிவிட்டனர். கரோனா பேரிடர் காலத்தில் அவசரமாக சட்டம் நிறைவேற்றியது ஏன்?. முதல் முறையாக மக்களவையில் விவாதிக்கப்படாமல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பிரிட்டிஷ் அரசைவிட மோசமாக செயல்படக் கூடாது எனக் கூறினார்.