தில்லி எல்லையில் போராடிவரும் விவசாயிகளுக்கு இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் வெள்ளிக்கிழமை உணவு பரிமாறினார்.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 23-ஆவது நாளாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை திக்ரி எல்லைப் பகுதியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஜமீந்தரா மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த உணவை காங்கிரஸ் தலைவரும், குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங் பரிமாறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜேந்தர் கூறுகையில்,
“எங்கள் நாட்டின் விவசாயிகளுக்கு சேவை செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்கள் போராட்டம் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல, 3 கருப்பு சட்டங்களுக்கு எதிராக தான்." எனக் கூறுகிறார்.
இதற்குமுன் தில்லியின் சிங்கு எல்லையில் பேசிய விஜேந்தர் சிங், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவிட்டால் மத்திய அரசு அளித்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பியளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.